*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, October 06, 2014

குருதி வழிகின்ற குறியீடுகள்...

குழந்தை வெள்ளையாகவும்
கண் நீலமாக இருப்பதாகவும்
பலத்த சர்ச்சை அவர்களிடம்.

இருள் மண்டிய
கர்ப்பத்தின் திரவத்தால்
மூடப்பட்ட குழந்தைக்காக
பயம் கொள்கிறது
சுற்றமும் சூழலும்.

தந்தைக்கு
மெல்லச் சந்தேகம்.

ஆழ்கிடங்கிற்குள்
ஆதவன் கண்படா
பச்சையமற்ற அவிந்த குழந்தைக்கு
உயிர்ச்சத்துக்கள்
கிடைக்காக் கவலை தாய்க்கு.

மறுத்தலும் குறுகுறுத்தலும்
வேண்டாம் பிரச்சனையென்று
ஒதுங்கிக்கொள்கிறார்கள் பலர்
பேசப்போனால் வில்லங்கமென
ஒத்திவைக்கிறார்கள் சிலர்.

தெருவோர மதிலில் ஒருவன்
எதையோ எழுத முயற்சிக்க
தீவிரவாதியென்ற பட்டத்தோடு
காணாமல் போய்விடுவானென
கரிக்கட்டை பறிக்கிறார்
பாவப்பட்ட தந்தையொருவர்.

ஊடகவியலாளன் தன் குறிப்பில்
"அவிந்த குழந்தையும்
அதன் அவதியும் அங்கீகாரமும்"
எனத் தலைப்பிடுகிறான்
கைதாகும் சாத்தியக்கூறுபற்றி
அவன் பயந்திருக்கவில்லை.

கர்ப்பம் விட்டு வருமுன்னமே
சர்ச்சைக்குரிய
குழந்தையாகிவிடுகிறது அது.

எழுதுபவர் எழுத
உறவினர்கள் குசுகுசுக்க
வைத்தியர்கள் ஆராய
தந்தை முகம் சுளிக்க
தாய் தவிக்க
தூரங்கள் துண்டித்துக்கொள்ள
பிறக்குமுன்னமே
தோல் முளைக்காமல்
பிறக்கலாமோவென
எண்ணிக்கொள்கிறது அக்குழந்தை.

நாடுகடத்தப்பட்ட சூழ்நிலையில்
அதிகாரிகளால்
சட்ட ஒழுங்குகளுக்குள்
மீண்டும் சிறைபிடிக்கப்படுகிறது
அக்கர்ப்பம்.

நாடில்லா அகதிகளென
முத்திரை குத்தப்பட்டு
பிறக்கவும்
இறக்கவும் விரும்பா
உடலைச் சுமக்கிறது
ஒரு தாயின் வயிறு.

அந்நியமாக்கப்பட்ட
அது
அதுவாகவே
அடங்கிக்கொள்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா !

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை சகோதரி..
வாழ்த்துக்கள்...

சக்தி கல்வி மையம் said...

நாடில்லா அகதிகளென
முத்திரை குத்தப்பட்டு
பிறக்கவும்
இறக்கவும் விரும்பா
உடலைச் சுமக்கிறது
ஒரு தாயின் வயிறு-- கொடுமை..

Post a Comment