*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 19, 2013

சொல்ல மறந்து...


எழுத நினைத்த நேரத்தில்தான்
இறந்துகொண்டிருக்கிறது
அது....
தன்னைக்குறித்தும்
தன் தனிமை குறித்தும்.

ஈர மரக்கிளைகள்
பற்றிக்கொண்டு
சுரக்கும் கண்ணீரோடு
பச்சிலைக் கடனுக்கு
உடன்பட்டு
எச்சில் பறக்க
கதறியது ஒரு நாள்
ஓவென்று.

உருபு மயக்கத்தோடு
ஒரு வேற்றுமை
மற்றொரு வேற்றுமையின்
பொருளில் வருவதுகூட

பொருத்தம் இல்லையென
கருத்துச் சொல்லிப் போனார்கள்
தெருவைச் சிலாகிப்பவர்கள்.

தனித்துப் பேசுபவர்களை
விசரென்று அறிபவர்கள்
தாங்களும் ஒரு வகையில்
அவர்களேயென
சொல்லிவைக்கலாம்
எதுவிதத் தயக்கமுமின்றி
மலசலக்கூடச் சுவர்களிலோ
பள்ளிச்சுவர்களிலோ.

சிலுவைகளில் தனித்து
அறையாமல்
குருதி சுண்டிக் கருக்குமளவு
கதறிப் பின்
இறப்பவர்களுக்கு
புதிது புதிதான
சில ஆறுதல் வார்த்தைகளை
சொல்லி ஆசீர்வதியும்
எம் பிரானே!!!

ஹேமா(சுவிஸ்)


10 comments:

VijiParthiban said...

அருமையான வரிகள் ஹேமா... அருமை....

Angel said...

எழுத வார்த்தைகள் வரவில்லை ..பலபல அனுமானங்களை கிளறி கிண்டும் கவிதை வரிகள் .
FANTASTIC!!!!

Angel said...

எப்படித்தான் கவிதைக்கு இவ்வளவு பொருத்தமாக படங்களை தேடி பிடிக்கிறீங்க ஹேமா !!!!!!!!

”தளிர் சுரேஷ்” said...

முதல் இரண்டு வரிகள் மிகச் சிறப்பு! அருமையான படைப்பு! நன்றி!

அப்பாதுரை said...

ஆசீர்வதிக்கப்பட்டக் குற்றங்களும் சபிக்கப்பட்டத் தியாகங்களும் உங்கள் கவிதைகளில் இளங்கலவி போல் இயல்பாகக் கலப்பது என்னைத் தொடர்ந்து வியக்க வைக்கிறது.

இதையும் 'நான்' கவிதையும் மிகவும் ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஆக்கம்... ரசித்தேன்...

'பரிவை' சே.குமார் said...

உருபு மயக்கத்தோடு
ஒரு வேற்றுமை
மற்றொரு வேற்றுமையின்
பொருளில் வருவதற்குக்கூட
கருத்துச் சொல்லிப் போனார்கள்
தெருவைச் சிலாகிப்பவர்கள்


அருமையான வரிகள்...
அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.

Seeni said...

mmm...

தனிமரம் said...

சிந்தனையைக்கிளரும் கவிதைக்கோர்வை!ம்ம் எம்பிரானே என்று முடிக்கும் போது நச் என்ற உணர்வு!

வெற்றிவேல் said...

வழக்கம் போல அருமை ஹேமா...

Post a Comment