*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 23, 2013

புத்தகமானவனுக்கு...


செப்படி வித்தைகள் கற்ற
சொக்கும் உன் சிரிப்புனக்கு
பத்திரமாய் புத்தகமாகி
ஞாபக ஊஞ்சலில்
இப்போ.

தொலைதூரமானவன் மட்டுமே
தொலைந்தவனல்ல நீ
உன்னைப் படிக்கும்போதெல்லாம்
ஒற்றைத் துளிக் கண்ணீர்கூட
கரைப்பதில்லை
உன் நினைவுகளை.

அன்பே....
சுவர்க்கப்பூமியில்
வசித்துக்கொண்டே தேடுகிறேன்
என்னைச் சுற்றிக்கிடக்கும்
சுவர்க்கம் நீதானே.

புத்தகமாக்க நினைத்தும்
கோர்வைக்குள் அடங்காதவளென
கை விட்டவன்
அப்போ நீ...
என் புத்தகத்தில்
ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும்
இப்போ நீ.

கனவுச் சூரியனடா நீயெனக்கு
பகலும் இரவும்
வெளிச்சமாய் எந்நேரமும்
நல்லதொரு வழிகாட்டியாய்.

ஒரே ஒருமுறை
ஒரே ஒருமுறை
வருவாயா
என் கைகளை
இறுக்கிக்கொள்கிறாயா
உன்னைத்தாண்டி
எந்த மரணமும்
என்னை நேசிக்காது.

வாசிப்பும் நீ
வசிப்பும் நீ
எனக்குள் மட்டுமே
திறந்து மூடும்
புத்தகமும் நீயே!!!

ஹேமா(சுவிஸ்)

(புத்தகதின வாழ்த்துகள்)

10 comments:

பால கணேஷ் said...

எனக்குள் மட்டுமே திறந்து மூடும் புத்தகம்! கனவுச் சூரியன்! வார்த்தைகளில் மயங்கி நிற்கிறேன் ப்ரெண்ட்! எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு உங்களோட இந்தக் கவிதை!

Seeni said...

silirkka seythathu....

Angel said...

//உன்னைத்தாண்டி
எந்த மரணமும்
என்னை நேசிக்காது.//


காதலை சொல்லும் என்னவொரு அற்புதமான வரிகள் !!!!

இளமதி said...

ஒரு புத்தகத்தை வைத்து அழகியதொரு கவிப்பின்னல்.
அழகாக அருமையாக இருக்கிறது ஹேமா. வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன்... மேலும் ரசிக்கத் தூண்டும்... பாராட்டுக்கள்...

அழகு... அருமை... வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

வாசிப்பும் நீ
வசிப்பும் நீ
எனக்குள் மட்டுமே
திறந்து மூடும்
புத்தகமும் நீயே!!!//

வாசிப்பும் நீ வாசிப்பும் நீ, அடடா அருமை அருமை....!

கீதமஞ்சரி said...

புத்தகக் காதலனிடம் சிக்கிக்கொண்ட வாசகியின் நேசமிக்க யாசகம் அழகிய கவிவடிவில் அசத்தல். பாராட்டுகள் ஹேமா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

thiyaa said...

உலக புத்தக தினக் கவிதையா ஹேமா?
அருமையாக உள்ளது

Tamizhmuhil Prakasam said...

"வாசிப்பும் நீ
வசிப்பும் நீ
எனக்குள் மட்டுமே
திறந்து மூடும்
புத்தகமும் நீயே!!!"
அருமையான வரிகள் தோழி. வாழ்த்துகள் !!!

Post a Comment