*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 18, 2014

கனவிது...


கிறங்கா மனதை அசைத்து
கனவைச் சமன் செய்தபடி
என் அறையெங்கும்
இறைந்து கிடக்கிறது
தொலைதூர முத்தம்.

பூனையின்
புசுபுசு கண்களில்
காதலைத் தேக்கி
எனக்குள்
பீச்சிக்கொண்டிருக்கிறது
பிரியங்களாய் அது.

முத்தங்களை
முலை முட்டிக் கேட்கும்
குழந்தையென
ஆக்கிவிட்டு
கலையாக் கனவுகளுக்காய்
காவலுக்கும் எனையிருத்தி
கசிந்துருகி காதலிசைக்க
காற்றையும்
கலைத்துப் பிடிக்கிறது.

வலிக்காத் தமிழ் கொய்து
முத்தங்கள் பிரித்து
பித்தம் நீக்கி
மலர் வாடக் கண் கலங்கி
உயிர்கள் நேசித்து
கொடூரமும்
சிதைவும் கண்டிரங்கி
மரங்கள் ஊன்றும்
மானுடமது.

ஆனாலும்
என் இரவை நீட்டி
மெது மெதுவாய்
கவிழ்த்து வீழ்த்தும்
பெரும்பள்ளமும் அது !!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

சீராளன்.வீ said...

விழிகள் தொலைத்த கனவின்
விலாசம் தேடும் நினைவுகள் ..!


அருமை அழகு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

அம்பாளடியாள் said...

சிறப்பான காதல் கவிதை வரிகள் வாழ்த்துக்கள் தோழி .

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வரிகள் சிறப்பு....
வாழ்த்துக்கள் சகோதரி.

Post a Comment