*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, January 27, 2014

படைத்தவனும் படைத்தவனும்...

பார்த்துக்கொண்டிருக்க....

இது பத்தோ அல்லது
பதினைந்தாவதாகவோ இருக்கலாம்
வட்டம் வட்டமாய் சிகரெட் புகை
கடவுளைச் சுற்றிலும்.

வானத்தின் தேகமெங்கும்
அதிரும் இரும்புப் பறவைகள்
பச்சையம் அழித்து
இரத்தக் களறியாகும் பூமி.

பச்சைக்குழந்தையிடம்
இச்சைதேடும் நரன்.

இதற்குள்ளும்
நன்றி மறவாத நாய்
கொடுத்துண்ணும் காக்கா
வரிசை கலையா எறும்புகள்
மனிதன் தவிர
தம்மை மாற்றா மாற்றுயிர்கள்.

அழிக்கும் வனம் அழ
பாறையில் முளைவிடும் சிறுவிதை
பெருமரமென மலை பிளந்து
தடைக்கற்கள் கடந்து வேர் விரித்து
சிக்கும் சின்ன வேர்களை விசாரித்தபடி
ஆழப் பதிய வைக்கிறது தன்னை.

கடவுளைப் பார்த்து முறைக்கிறேன் நான்
மனிதன் பண்ணிய புகைக்குள் அவர்!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

சீராளன் said...

மறையேற்று வாழ்தல் மகிழ்வோ டினிக்கும்
குறையற்ற வாழ்வைக் கொடுத்து !

உயருள்ள வரிகள்

இனிய வாழ்த்து
வாழ்க வளமுடன்
1

தனிமரம் said...

கடவுளைப் பார்த்து முறைக்கிறேன் நான்
மனிதன் பண்ணிய புகைக்குள் அவர்!!!// ஆஹா அருமையான முடிவு கவிதை கவிதாயினி.

திண்டுக்கல் தனபாலன் said...

தம்மை மாற்றா மாற்றுயிர்கள் - உண்மை தான்...

நிலைமாறினால் குணம் மாறுவான்...
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்...
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்...
அது வேதன் விதியென்றோதுவான்...

மனிதன் மாறிவிட்டான்... மதத்தில் ஏறிவிட்டான்...
ஓ...ஓ...ஓஒஒ ஓஓஓஏ
ஓ...ஓ....ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி...
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி...
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்...
பாவி மனிதன் பிரித்து வைத்தானே...!

மனிதன் மாறிவிட்டான்... மதத்தில் ஏறிவிட்டான்...

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...

படம் : பாவ மன்னிப்பு

வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

”தளிர் சுரேஷ்” said...

மாறிக்கொண்டிருப்பவன் மாற்றிக்கொண்டிருக்கிறான் பூமியை! என்ன செய்வது? அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

ஜெயசரஸ்வதி.தி said...

///மனிதன் தவிர
தம்மை மாற்றா மாற்றுயிர்கள்.////

அருமை ..!!!

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!

Post a Comment