*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, January 01, 2014

2013 ன் இனித்த நாட்கள்...

யாழ்ப்பாண
(பனை+கள்)பனங்கள்ளாக
உன் பேத்தல்களை
வோட்கா தூக்கிக்கொடுக்க
உன் போதைக் கண்களை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

நிரப்பிய நேரத்தைவிட
நினைக்கும் நேரம்தான்
வழிந்தோடுகிறது
கன்னக் கிண்ணமும்
இதழின் பள்ளமும்.

நினைவுகள் முட்ட முட்ட
திணறுகிறது வயிறு
இரைமீட்டிச் செரிக்கவிடுகிறேன்.

இன்னும் மாறாமல் நீ அப்படியேதான்...

சர்வமும்
காதல் சர்வஞ்ஞனென்று
சொல்லிக்கொள்ளும்
உன்னிடம் நான்...
2013 ல் நீ நிரப்பிய
முத்தக்குவளைகள் நீட்டியபடி
உன் ஒப்பத்திற்காக.

ஒருநாள்..

என்முலை கசிந்த
பால்வாசனை பரவி
விழித்த இரவில்
அமிலம் பட்ட விழிகளோடு
ஒரு காமமுத்தம்.

பிறந்த நாளில்...

சித்திரக்குழந்தைகள்
வன்னிச் சத்திரத்தில்
கும்பலாய் கொல்லப்பட்ட
கொடூரம் மறக்க
மறக்காத நாளில்
உப்புமுத்தம்.

இன்னொரு நாளில்...

கௌவுதலும் விடுவித்தலுமாய்
பிறந்த நாய்க்குட்டியென
கண்விழிக்கத்தொடங்கிய சமயம்
முழுசாய் சுயமறுத்து
காலடியில் வீழ்த்திய
மின்சாரமுத்தம்.

’ம்’ சொன்ன நாளில்...

மூங்கிலுக்குள்
ஒரு விடியற்காலையில்
உள் நுழைந்த இசைவண்டாய்
காட்டையே நிறம் மாற்றிய
கலவையில் குழப்பிய
ராகமுத்தம்.

மம்மல் நாளொன்றில்...

பனித்துளி நுனியில்
வலிக்காமல்
அமர்ந்தெதெழும்
சிறு பட்டாம்பூச்சியென
நுனி இதழ் கடித்து
ஏமாற்றி
பின் முழுவதையும்
மூச்சில் அள்ளும்
வாமன முத்தம்.

மழை நாளில்...

சமையல் பிந்திய கோபத்தில்
சண்டை முடித்து
சமாதானம் சமைத்த
வௌவால் முத்தம்...

சம்மதித்த நாளில்...

புதினங்கள் ஏதுமற்ற
செய்தித்தாளெனக் கிடக்கையில்
என் தனிமை கலைக்கும்
கலவியில்
கர்ப்பமும் சுமத்தலுமில்லா
குழந்தைகளை அருகே கிடத்தும்
யுத்தமுத்தம்.

அன்றும் இன்றும் என்றும்...
புத்தகத்தின் பக்கங்களென
நாளொன்றின் ஏடாய்
புரட்டினாலும்
தீராப் பக்கங்களை
ஒளித்தே வைத்திருக்கும்
அகராதியின்
வார்த்தைகள்போலத்தான்
எனக்குள் எப்போதும் நீ...

சரி...சரி
சரிபார்த்து ஒப்பமிடு
2013 க்கான பதிவேட்டில்
நம் முத்தங்களைக் கிரீடமாக்க !!!

ஹேமா (சுவிஸ்)

12 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்வீட்ஸ் ஹேம்ஸ் ...!

ஸ்ரீராம். said...

என்ன உவமைகள்... அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

மகளுக்கு,இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!///யாழ்ப்பாணப் பனைக் கள்ளின் சுவை 'வோட்கா' வில் இல்லை!'ஷாம்பையின்' இல் தான் இருக்கும்!ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

அழகான அருமை உவமைகள் கவிதாயினி.இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

எத்தனை முறை படிப்பது..? சலிக்கவில்லை.

அப்பாதுரை said...

புத்தாண்டில் நலமும் வளமும் உங்களை விடாமல் முத்தமிடட்டும்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014

'பரிவை' சே.குமார் said...

ஆஹா.... அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள்.

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

அ. வேல்முருகன் said...

முத்தம் இனிப்பானதுதான் ஆயினும் வேதனைத் தருணங்களின் கிடைக்கும் முத்தம்..... அதன் பிணைப்பு...

விச்சு said...

தீராப் பக்கங்களை
ஒளித்தே வைத்திருக்கும்
அகராதியின்
வார்த்தைகள்போலத்தான்
எனக்குள் எப்போதும் நீ...
ம்ம்.. அருமை ஹேமா..

Post a Comment