*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 30, 2013

பெருங்கடலொன்றின் வார்த்தைகள்...


பாதி எரிந்தணைந்த
உடலொன்றொன்றுக்கான
இருப்பிடமாகிறது
என் பாறையிடுக்கு.

ஊத்தைச் சொற்களையும்
தின்றொழிக்கும்
சாலமோன் மீன்கள் ஒட்டிய
என்னில்
ஒரு கூச்ச நெருடல்.

தன் குஞ்சுகளை மூடி
மணலிடும் தாய் நண்டில்
கிளிஞ்சல்களை அள்ளியெறியும்
வலைவீச்சுக்காரனாய்
ஆதிக்க ஆர்ப்பாட்டங்கள்.

பேரூழியக்காரர்களின்
சாம்பல் கரையும் கடலில்தான்
இனம்பெருக்கும்
பெரும் சுறாக்களும்.

ஆடி அடங்கும்
ஆழக்கடலின் பாசிச்சிக்கலுக்குள்
பிறந்திறக்கும்
சாபப்பாறைகளின் நடுவேதான்
இத்தனை வாதைகளும்
நடப்புக்களும்
பரிமாற்றாங்களும்
படுகுழிகளும்
ஆசைகளின் பேரவலங்களும்.

பக்குவமில்லாப் பிறப்புக்களை
இனியும் அனுமதிப்பதில்லையென்கிற
விதியொன்று செய்ய
கடலூரிகள் முதுகில்
எழுதி வைத்துவிட்டே
காத்திருக்கிறோம்.

இம்மீதி உடலைக் கொழுத்த
நீளும் ஒரு கை.

அக்கை பற்றி விதி சொல்ல
ஒரு மொழி சொல் அலையே
ஆயிரமாயிரம் உடல்கள் கரைத்த
வாசனைக்குச் சாட்சி நானென!!!

 http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

ஹேமா(சுவிஸ்)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை வரிகள்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
உணர்வு மிக்க வரிகள் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பாதுரை said...

கடலைப் போலவே ஆழம்.

Seeni said...

Mmm...

தனிமரம் said...

அழமான சிந்தனைக்கவி.

Post a Comment