*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, November 05, 2014

மாயா உனக்காக...

குளிர் கொத்தித் தின்ன
மஞ்சளும் செஞ்சிவப்புமாய்
பரவிய இலைகள் நடுவில்
கணங்கள் கடுக்க நிற்கிறேன் மாயா.

வாழ்ந்த நினைவாய்
வடுக்களை விட்டுக் காலடி
காலடிவந்து விழுகின்றன
இலைகள்.

பிரியமாட்டேனெனச் சொன்ன
பாசத்தின் உச்சமாய் இருக்கலாம் மாயா
கவிழ்ந்து காலடி நசியும் இந்தத் தண்டனை.

தராத தண்டனைகளின் வலி அதிகம் மாயா
நீயே தண்டித்துக்கொள் என்பதாய்.

நீ சோதித்தபோது சிறகிருந்தது எனக்கு
வெட்டிக் கூண்டிலடைக்க நினைக்கும் உரிமையோடு
உன் வக்ர அதிகார புத்தியை மாற்றிக்கொள்ளும்
சுய உரிமையை மட்டும்
மறுத்துக்கொள்கிறாய் ஏன் மாயா ?

உன் சொற்களின் அகங்காரம் சில
என் மனதில் தக்கையாய் மிதக்க
ஆழப்புதைகிறதுன் மிகை அன்பு.

வாழ்வு பற்றி நினைக்காத என்னிடம் வலி பிழிந்து
மழையாய்ப் பொழிந்தொரு திருகுபாதை செய்தாய்
பாறை அமுக்கிய வலியோடு முளைவிட்ட
வெள்ளைப் புல்லாய் நான்
உன் திருகலில் பிளந்து வெளிவந்தேன் மாயா.

மீண்டும் புதைத்துவிடு
குளிரில் நடுங்கி நிற்கிறேன்
மஞ்சள் நிற இலைகள் நடுவில் மரத்த மனதோடு
இன்னுமொருமுறை
ஆசைத் துளிரேதும் வராதபடி திருகிவிடு
என் நுனியை.

கொஞ்சம் இரு மாயா ...

சில முத்தங்கள் தந்திருந்தாய்
நானேதும் தராத கடனாக
மழைநாளில் அப்பிள் பூவாசம்போல
அள்ளிச் சேமித்திருந்தேன்
யாருமில்லா இந்த நடைபாதையில்
கண்ணீரும் கட்டியாக
கொட்டும் ஐஸ் மழையில்
உதிர்த்திக் கரைக்கிறேன்.

மாயா நீ மலையளவா
இல்லை என் உள்ளங்கையின் கனவளவா
புதிர் அவிழா
இன்னும் கண் வரையா கலையழகும் நீ.

நீ எனக்கொரு ஓவியம்போல
கவிதைபோல அவ்வளவே
இடையூறே தவிர
நிறுத்தமுடியா கால அளவு நீ மாயா.

உன் மீசையழகு
விறைத்த முகமழகு
கர்ஜிசிக்கும் குரலழகு
ஆண்மை சிலிர்ப்பும் சிரிப்பழகு

ஆனாலும் ??????!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)


2 comments:

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

தினேஷ்குமார் said...

உன் சொற்களின் அகங்காரம் சில
என் மனதில் தக்கையாய் மிதக்க
ஆழப்புதைகிறதுன் மிகை அன்பு....

காதலும் கோபமும் சங்கமித்து செல்கின்றன

Post a Comment