*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, November 25, 2014

உறுதி மொழி...

நிலாக்குட்டி சுகமா நீ ?
கதைச்சுக் கன நாளாச்சு.

இருட்டிவிட்டதா உன் நாட்டில் ?

இது கார்த்திகை மாசம் நிலா
இருண்ட நம் ஈழதேசம்
பார்த்திருக்கிறாயா
பதுங்குழிகளோடு ?

உனக்கென்னடி
கனடிய பிரஜை நீ.

மூன்று மணிக்கே
இருளாகிறது ஐரோப்பாவில்
இருளானவர்கள் நிழலாக
பொப்பிப் பூப்போல்
நிமிர்ந்தே நிற்கிறார்கள்
வணங்கிக்கொள்
இது கார்த்திகை மாதம்.

நமக்காய் வீறுகொண்ட
வேங்கைக் குட்டிகள்
நமக்காகவே நாமம் மாற்றி
நமைந்து போனவர்கள்.

யாரும் அழவேண்டாம்
நெய்யூற்று நிலா தீபங்களுக்கு.

மாவீரர் அவர்கள்
நினைவுக் கல்லறை அற்றவர்கள்
ஆணிகளேயில்லாமல்
நமக்குள் அறையப்பட்டவர்கள்.

அவர்கள் நம்மோடு இருந்தபோது
பதுங்குழியாவது இருந்தது
சொந்தமாய் நமக்கு.

இப்போ நம் குழிக்குள்
புத்தனும் அவன் சேவகர்களும்.

யாரோ ஒருவர் நிறுத்திய சைக்கிளை
நான் உழக்கிக்கொண்டிருக்கிறேன்
துப்பாக்கிகள் அடுக்கிய தெருவில்
தற்செயலாக
அவை வெடிக்கலாம் இப்போதும்
எப்போதும்.

இதுதான் ஈழத்தின்
இயல் வாழ்க்கை இப்போது.

யாரும் விஞ்சமுடியா வாளை
உறைக்குள் வைத்தார்களே தவிர
உறங்க(கி) விடவில்லை.

கள்ளருந்திய செல்லப்பூனைகளாய்
எங்களைச் சுற்றியவர்கள்
எங்கள் இல்லங்களில்.

அவர்கள் தீட்சண்யக் கண்களை
கண்டிருக்கிறாயா நிலா
கனவுகள் எரிந்துகொண்டிருக்கும்
எந்நேரமும் தகதகக்க.

வீரமரங்கள்
நம் அண்ணாக்களும் அக்காக்களும்
அணில் அரிக்க வாய்ப்பில்லை.

அண்ணாக்களின் பாதுகாப்பில்லாத
பூக்கள் இப்போது சிரிப்பதில்லை
பொம்மைகள் எல்லாம் ஊனமாய்
நூதனமான கிராமங்களில்.

நள்ளிரவில்
தனித்துக் கரையும் காகங்களை
முடிந்தவரை ஒற்றுமையோடு
துரத்திக்கொண்டேயிருப்போம்.

நீ கனடா தமிழச்சியல்ல
நானும் சுவிஸ் தமிழச்சியல்ல
நாம் ஈழத்தவர்கள்
எமது தேசம் ஈழம்.

வெல்வோம்
விண் அதிரச் சொல்வோம் நிலா
வெல்வோம் வெல்வோம்
விடுதலைக் காற்றைச் சுவாசிப்போம்.

இன்றல்லாவிட்டாலும்
இழந்த அத்தனைக்கும் ஈடாய்
இன்னொரு சூரிய உதிப்பின்
தலைமுறை மாற்றத்தில்.

கை கோர்த்து
உறுதி கொள்வோம் இன்று.

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம் !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

2 comments:

தனிமரம் said...

அவர்கள் தீட்சண்யக் கண்களை
கண்டிருக்கிறாயா நிலா
கனவுகள் எரிந்துகொண்டிருக்கும்
எந்நேரமும் தகதகக்க.//விடிவெள்ளி போல தீப ஒளி!

நிலாமகள் said...

கார்த்திகை மாதங்கள் கனத்த சோகத்தையும் தளரா மன உறுதியையும் பட்டை 'தீ 'ட்டியபடியே.

Post a Comment