*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, February 19, 2014

மகள்களின் செல்லப்பூனைகள்...

மகள்களின் தேவைகளை
ரசனைகளை
அப்பாப் பூனைகள் மட்டுமே
வாசம் பிடிக்கிறார்கள்.

கனவு கண்டால்
வீபூதி பூசிவிடவும்
மார்பை 
எழுதுபலகையாக்கி
விரல்களை
எழுதுகோலாக்கி
அ...ஆ கிறுக்கவும் 
'பித்தா பிறைசூடி' பாடும்
கடவுளர்கள் அவதாரத்தோடு...

அம்மா விடுத்து
கைப்பிடித்து நடக்கவும்
முதுகில் தொங்கவும்
அழகான நண்பனும்
ஆசிரியனும்
ஆனையும்
அப்பாக்கள்தான்
மகள்களுக்கு.

காதலிக்கும் மகளுக்கு
பூனைச் சமாதானம் சொல்லவும்
அம்மாக்களின் திட்டுக்களில்
பங்கெடுக்கவும்
கொடி பிடிக்கும்
மந்திரிகளாகவும்
அப்பாக்கள்.

சுவாரஸ்யமாக
பகிர்ந்துகொள்கிறார்கள்
செல்ல அப்பாக்கள்
அம்மாவிடம் சொல்லாத
டைரிக் காதல்களை
மகள்களிடம்.

புகை பிடிக்கும் பூனைகள்
தைரியமாக
சத்தியம் பண்ணுகிறார்கள்
அம்மாக்கள் தலைமீது
மகள்களின் தைரியத்தில்.

அம்மாப்பூனையின்
உறுமலைக் காப்பாற்றும்
வீரத் தேவதைகளாகிவிடுகிறார்கள்
மகள்கள் எப்போதும்.

மகள்கள் இல்லா வீட்டில்
கொலுசொலி கேட்பதில்லையென்று
பூனையின் காலில் கொலுசு கட்டியும்
விட்டுப்போன உடையைத்
துவைக்காமல்
மகள் வாசனையை  
சுவாசிக்கிறது அப்பாப்பூனை.

அப்பாக்களுக்கு மகள்களும்
மகள்களுக்கு அப்பாக்களும்
இல்லாவீடு
புழுதி பிடித்தும்
பேசாமலும் கிடக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த சந்தோசமே தனி... கொடுத்து வைத்திருக்க வேண்டும்...!

”தளிர் சுரேஷ்” said...

அப்பாக்களுக்கு மகள்களும்
மகள்களுக்கு அப்பாக்களும்
இல்லாவீடு
புழுதி பிடித்தும்
பேசாமலும் கிடக்கும்!!!// அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!

அப்பாதுரை said...

உண்மை.

'பரிவை' சே.குமார் said...

மகள்களின் செல்லப் பூனைகள் அருமை...
வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

Prabu M said...

//அப்பாக்களுக்கு மகள்களும்
மகள்களுக்கு அப்பாக்களும்
இல்லாவீடு
புழுதி பிடித்தும்
பேசாமலும் கிடக்கும்!!!//

மௌனம் பேசும் வரிகள்...
அற்புதமான கவிதை அக்கா....

விச்சு said...

அப்பா.. என்றுமே மகள்களின் செல்லம்தான்.

மோ.சி. பாலன் said...

அருமையான கவிதை!

Post a Comment