*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, February 11, 2013

கர்வம் அவனழகு...

மன்றாட்டங்களை அவன்
ஒருபோதும்
செவிமடுப்பதில்லை
தவிர்க்கிறான்
சிலுவைகளால்
அறையப்பட்டவனிடம்
இரக்கம்
இருக்குமென்றிருந்தேன்
கர்வச் சிலுவைகளால்
தன்னைத்தானே
அறைந்துகொண்டிருப்பதை
அறிந்துகொண்டிருக்கிறேன்
இப்போது.

அவன் மொழியறிந்து
அவனையே சுற்றி வருகிறேன்
தொட்டுத் தடவும் தென்றலாக
தொட்டு வழி கடக்கையில்
தவறிப் பிறழ்கிறது
இலக்கணம்.

தொடரும்
நினைவுகள் அப்பிய
மனச்சுவரில்
வெள்ளையடித்தல் பற்றிய
அப்பிப்பிராயம் ஏதுமில்லாமல்
அவன்.

ஒரு புத்தகம்
இல்லை
ஒரு துளிப் பனி
யன்னல் குருவி
வாசல்படி
என்னைப்பற்றிய எரிச்சல்
வேலைப்பளு
வானம் வரா நிலவு
பசிக்கும் வயிறு
இவைகள் தவிர
எல்லாம் எல்லாமே
பெரும்பாரமாய் அவனுக்குள்.

பெரும்பாரங்களை
சுமந்துகொண்டிருக்கும் அவனிடம்
போதுமானதாய் இருக்கிறது
கொஞ்சம் மகிழ்ச்சியும்
நிறைந்த வலியும்.

இனி யாசிக்க ஏதுமில்லை
அவனிடம்
இயலாமைக்குள்
இல்லையாய்
இருப்பவனிடம்
நிறைந்திருக்கும்
என் அன்பு.

தொடர்கிறேன்
தனிமையென்கிற
மெழுகுதிரிச் சுவர்களின்
அடர்த்தி நிழல்களுக்கு
ஒன்று நான்
ஒன்று அவன்
என்று பெயரிட்டு!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

இளமதி said...

//பெரும்பாரங்களை
சுமந்துகொண்டிருக்கும் அவனிடம்
போதுமானதாய் இருக்கிறது
கொஞ்சம் மகிழ்ச்சியும்
நிறைந்த வலியும்//

அவனிடம் நிறைந்த ரசனையும் கொஞ்சம் கோபமுமோ உமக்கு...:)
வலியைச்சுமக்கின்றீர்...
நிழலுக்கு அவன் பெயரிட்டு துணை என்கிறீர்...

அருமை. வாழ்த்துக்கள் ஹேமா!

ராமலக்ஷ்மி said...

அருமை ஹேமா.

ஸ்ரீராம். said...

நல்ல கவிதை ஹேமா.

Angel said...

இனி யாசிக்க ஏதுமில்லை
அவனிடம்
இயலாமைக்குள்
இல்லையாய்
இருப்பவனிடம்
நிறைந்திருக்கும்
என் அன்பு.//
அருமையான வரிகள் ஹேமா

அருணா செல்வம் said...

கவிதையை அசை போட்டுக்கொண்டே
இருக்கிறேன் ஹேமா....

கவியாழி said...

தொடர்கிறேன்
தனிமையென்கிற
மெழுகுதிரிச் சுவர்களின்// என்னத்த சொல்ல ?

MANO நாஞ்சில் மனோ said...


பெரும்பாரங்களை
சுமந்துகொண்டிருக்கும் அவனிடம்
போதுமானதாய் இருக்கிறது
கொஞ்சம் மகிழ்ச்சியும்
நிறைந்த வலியும்.

Post a Comment