*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, January 27, 2013

காதல் துளிகள்(5)

எத்தனை அலைகள்
வந்தபோதும்
உன் பெயர்கொண்ட
அலை மட்டுமே
உடைக்காமால்
அணைத்துப் போகிறது
என்னை !

வரம் தந்து
தொட்டுத் திரும்பும்
அலையாகவே
இருந்துவிடு
கரையாகவே
இருந்துவிடுகிறேன்
நான் !

நீயில்லா உலகில்
இன்னும்
சூடமுடியா
பூக்கள் பறித்தபடி
நான்....

கொஞ்சம் பொறு
பெருவெளி
கடந்துகொண்டிருக்கிறேன்
ஆனால்
இன்னும்
உன் வாசனை எட்டவில்லை
நியாயத்துக்கு மாறாக
பயணித்த உன்னை
இப்போதும் மன்னிக்கிறேன் !

அன்பென்று
சொல்லிச் சொல்லியே
என் இருப்பைக்
கலைக்கிறாய்
கொஞ்சமாவது
விட்டு வை என்னை
எல்லாமாய் எடுத்துக்கொள்கிறாய்
காற்றுவழி அலைகிறேன்
ஏகாந்தங்களை சரிசெய்தபடி
அங்கும் .....மிதக்கிறேன்
நீ தந்த ஒற்றைச் சிறகோடு !

இன்று...
இப்போ...
இனி...
என்று கடந்துகொண்டே
நிமிர்ந்தும்...
தாழ்ந்தும்...
அகன்றும்...
சுருங்கியும்...
இன்னும்....இன்னுமென
நீண்டுகொண்டே போகிறது
எதிர்பார்ப்பும் ஆவலும்
வாழ்வு நாட்களின்
சேதாரத்தின் இயல்பை
தவிர்ப்பாரின்றி.

வாழ்வின் தத்துவம்
போலானவனே
ஞாலக்கதிரில்
தூங்குகிறாய்
எதுவித பிரக்ஞையுமற்று !

வாசனைத் திரவியங்கள்
ஏதும்
போதுமானதாயில்லை
கனவுகளை
கொன்று புதைக்கிறேன்.

பிணநாற்றம்
என்று முகம் திரும்பி
மூக்குப் பொத்தி
போகிறார்கள்
சிலர்.....
வழியில்
பிணமொன்று
சிதம்பிக்கிடப்பதாய்
எழுதிப் போகிறாய் நீ !

சுவிஸின்
உயர் மலைத்தொடரில்
உன் பெயர்
எழுதி வந்திருக்கிறேன்
உரத்து வாசிக்கக்கூடும்
அவைகள்
தீராப்பிரியங்களின்
சொற்களில்
உறைந்து கிடக்கிறதென் காதல்.

அவனிடமும்
சொல்லாதீர்களென
அதட்டிவிட்டே
தீவனமிட்டு வந்திருக்கிறேன்
வெள்ளை மலைகளின்
குருவிகளுக்கு
சிலுவை ஏந்தியவனின்
நினைவு நாளின்று !

ஹேமா(சுவிஸ்)

14 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அழுத்த மான காதல் வெளிப்பாடு

பால கணேஷ் said...

கொஞ்சமாவது | விட்டு வை என்னை | எல்லாமாய் எடுத்துக்கொள்கிறாய்
தீராப்பிரியங்களின் | சொற்களில் | உறைந்து கிடக்கிறதென்|
காதல்.
காதலினில் மூழ்கி வந்த வரிகள். மிக மிக ரசித்தேன் ஃப்ரெண்ட. சூப்பர்.

செய்தாலி said...

ம்ம்ம்...அருமை
ஈரப்படுத்துகிறது
துளிகள்

ஸ்ரீராம். said...

அருமை ஹேமா.

சின்னப்பயல் said...

அவனிடமும்
சொல்லாதீர்களென
அதட்டிவிட்டே
தீவனமிட்டு வந்திருக்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

நியாயத்துக்கு மாறாக
பயணித்த உன்னை
இப்போதும் மன்னிக்கிறேன் !

அழகான வரிகள்..

மாதேவி said...

வரம் தந்து
தொட்டுத் திரும்பும்
அலையாகவே
இருந்துவிடு
கரையாகவே
இருந்துவிடுகிறேன் நான்

அருமை ஹேமா.

இளமதி said...

ம்..அழகிய வரிகள். அருமையான உணர்ச்சிக் காவியம். ரசித்தேன் தோழி!

Anonymous said...

//நீண்டுகொண்டே போகிறது
எதிர்பார்ப்பும் ஆவலும்
வாழ்வு நாட்களின்
சேதாரத்தின் இயல்பை
தவிர்ப்பாரின்றி.//

மிகவும் ரசித்தேன். அருமையான கவிதை.

விழித்துக்கொள் said...

பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.

Yoga.S. said...

கலங்க வைக்கும் வரிகள்!ஹூம்!!!!

விச்சு said...

//எத்தனை அலைகள்
வந்தபோதும்
உன் பெயர்கொண்ட
அலை மட்டுமே
உடைக்காமால்
அணைத்துப் போகிறது
என்னை !// அன்பின் வெளிப்பாடு. எல்லா வரிகளுமே ரசிக்க வைக்கிறது ஹேமா...

'பரிவை' சே.குமார் said...

//அவனிடமும்
சொல்லாதீர்களென
அதட்டிவிட்டே
தீவனமிட்டு வந்திருக்கிறேன்
வெள்ளை மலைகளின்
குருவிகளுக்கு
சிலுவை ஏந்தியவனின்
நினைவு நாளின்று !//

அன்பின் வெளிப்பாடு அழகிய காதலாய்...
கவிதையில் கசிந்துருகி இருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

வாவ்...அன்பு பொங்கும் காதல் ரசம் கொட்டும் கவிதை, அழகு....!

Post a Comment