*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, November 22, 2011

சுகராகம்...

இதைத்தானே கேட்டுக்கொண்டாய்
பிடித்துக்கொள்
காதலும் நீ...கனலும் நீ...
தோழனாய்க்கூட கைநீட்டக்கூடாத
கல்லுளிமங்கனே....
மறந்திருக்கிறேன் உன்னை
சொற்படி நடக்கிறேனா
என்றாலும்
வெட்டிய வாழையில்
வெடிக்கும் குருத்தாய்
உன் நினைவுகள்.

கருத்த கனவுகளுக்குள்
நினைவுகளைக் கரைக்க
காயங்களுக்கு மருந்து தந்து
விடியலைத் தள்ளி
வெளிச்சமாகிறது நிலவு.

உன் வருகை விளக்கிலேயே
உறங்கிவிடுகிறேன்
என்னோடு நீயும்தான்
இளைப்பாறுகிறாய்
விழிகளும் இதயங்களும்
ஓய்ந்துவிட்டன
காத்திருப்புச் சந்திகளில்.

தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
இருமுனையில் ஒருமுனை
உன்னிடம் என்றறியாமல்.

போருக்குப் போக
ஆயுதமும் உடையும் தந்தபின்
வாளின் கூர்மைபற்றியும்
ஆடையின் அலங்கரிப்பு பற்றியும்
பேசிக்கொண்டு நீ
இடிபாடுகளுக்கிடையில்
எதிரியைக் காணும் ஆவலில் நான்.

நினைவுகளையும் கனவுகளையும்
காலத்தால் சலித்தெடுக்க
மிஞ்சுவதெல்லாம்
அவசியமில்லா
சப்பைக் கற்களும் குப்பைகளுமே
காதலும் கூட.

உன்னைக் காணாத நாட்களெல்லாம்
சூரியனுக்கு விடுமுறை
பூமிக்கு அமாவாசை
பனிக்குளிருக்குள்
ஒற்றை உயிரையும் தொலைத்து
யுகம் துழாவும் நான்
கனவை வரவழைக்க
வெப்பக் கருவியின் துணையோடு.

எத்தனை பொழுதுகள் விடிந்தன
நீ.....
இல்லையென்ற பூபாளத்தோடு

அதே பொழுதுகள் பழக்கித்தரும்
நீ......
இல்லையென்ற முகாரியையும்!!!

ஹேமா(சுவிஸ்)

41 comments:

Kanchana Radhakrishnan said...

//வெட்டிய வாழையில்
வெடிக்கும் குருத்தாய்
உன் நினைவுகள்.//

super

முனைவர் இரா.குணசீலன் said...

தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
இருமுனையில் ஒருமுனை
உன்னிடம் என்றறியாமல்.


மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்..


அருமை..

Kousalya Raj said...

படிக்க படிக்க கவிதை என்னை இழுத்து பிடித்து வைத்து கொண்டது ஹேமா !!

எந்த வரினு சொல்ல முடியல...!! எல்லாமே பெஸ்ட் !

சத்ரியன் said...

காதலுக்குள் அமிழ்த்தும் காந்த வரிகள்.

காதல், தனிமை,ஏக்கம்,தவிப்பென... கதம்பமாக ....

அருமை.

Anonymous said...

வெட்டிய வாழையில்
வெடிக்கும் குருத்தாய்
உன் நினைவுகள்.//

பனிக்குளிருக்குள்
ஒற்றை உயிரையும் தொலைத்து
யுகம் துழாவும் நான்
கனவை வரவழைக்க
வெப்பக் கருவியின் துணையோடு.//

தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
இருமுனையில் ஒருமுனை
உன்னிடம் என்றறியாமல்.//

என்னைக் கவர்ந்த வரிகள்...

தற்காலம்...வாழ்வியல்...மாற்று சிந்தனை...கவி நோக்கு...எல்லாம் ஒரே கவிதையில்...

Prabu Krishna said...

அருமை அருமை அருமை........

இதைவிட வேறு என்ன சொல்ல ???

இதமாய் செல்கிறது முழு கவிதையும்.

அப்பாதுரை said...

நன்றாக உள்ளது. "இருமுனையில் ஒருமுனை" மனதில் நிற்கிறது.

Angel said...

//தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
இருமுனையில் ஒருமுனை
உன்னிடம் என்றறியாமல்.//

மீண்டும் மீண்டும் ரசித்து படித்தேன் .அருமையான வரிகள் .தேர்ந்தெடுத்த படமும் அழகு ,வாழ்த்துக்கள் தோழி

ஸ்ரீராம். said...

அருமை. ஒவ்வொரு பாராவும் தனித் தனியாய்க் கூட நன்றாக இருக்கிறது. காலத்தால் சலித்தேடுத்தபின் மிங்கும் காதல் கூடக் குப்பையாகத் தெரிய அவரவர் அனுபவங்கள்தான் காரணமோ...! சிலந்தி வலையின் ஒருமுனை...அருமை.

ஷைலஜா said...

தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
//''\\\ஆ அருமை ஹேமா . பெண் இயல்பை அழகா சொல்லிட்டீங்க கவிதை மனசை அள்ளுகிறது

கலா said...

காதல், தனிமை,ஏக்கம்,தவிப்பென... கதம்பமாக ....\\\\

ஹேமா,,,கடையில் வாங்கினால் பணம் செலவாகும்..அதனால் எழுத்தில் கதம்பமே கட்டிக் கொடுத்துவிட்டார்

தமிழ் உதயம் said...

அழகான வார்த்தைகள் - அருமையான கவிதையாக மனதை நிறைத்தது.

கலா said...

தோழனாய்க்கூட கைநீட்டக்கூடாத
கல்லுளிமங்கனே....
மறந்திருக்கிறேன் உன்னை
சொற்படி நடக்கிறேனா\\\
ஜயோபாவம்!இப்படியெல்லாம்...மிரட்டல் நடந்ததா?
எனக்குத் தெரியாமப் போச்சே?

கலா said...

விழிகளும் இதயங்களும்
ஓய்ந்துவிட்டன
காத்திருப்புச் சந்திகளில்\\\

சந்திகளில் சந்திக்கவே இல்லையா?
சந்தித்தும்...உங்கைச் சிந்திக்கவே இல்லையா?..சிந்தித்தும் சந்திப்பு வரவே இல்லையா....?அப்படியென்றால் நீங்கள சூட்டிய பெயர்{கல்லுளிமங்கன்}சரிதான்!

கலா said...

உன்னைக் காணாத நாட்களெல்லாம்
சூரியனுக்கு விடுமுறை\\\\

சூரியனுக்கே...........விடுமுறையா?
"சுடப்போகுது" கவனம்!

கலா said...

ஹேமா,ஏற்றபடத்துடன்....
எழுதிய கவிதை
யாரோ சுட்டதால்...
"பட்டு"
வந்த வலியின்...வேதனை
எழுத்துகளில் தெரிகிறது

மிக அருமையான எண்ணாடல்...
ஹேமா!

சித்தாரா மகேஷ். said...

//எத்தனை பொழுதுகள் விடிந்தன
நீ.....
இல்லையென்ற பூபாளத்தோடு

அதே பொழுதுகள் பழக்கித்தரும்
நீ......
இல்லையென்ற முகாரியையும்!!//

உங்க தளத்துக்கு வந்ததும் திரும்ப மனசே வரவில்லை.அத்தனையும் அருமை அக்கா.

Unknown said...

// வெட்டிய வாழையில்
வெடிக்கும் குருத்தாய்
உன் நினைவுகள்.//

உவமை அருமை சகோதரி!
இதுவரை யாரும் சொல்லாத உவமை!
கவி முழுவதும் கவித்துவம்
கொடி கட்டிப் பறக்கிறது!
த ம ஓ 7
புலவர் சா இராமாநுசம்

Bibiliobibuli said...

ஹேமா, ஹேமா தான்...... அசந்திட்டன் ஹேமா!!! :)

என்ன சொல்லவென்று தெரியவில்லை. அதனால், பஸ்ஸில், + இல் பகிர்ந்தேன். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்//
நல்லா இருக்கு ஹேமா :)

சி.பி.செந்தில்குமார் said...

எத்தனை பொழுதுகள் விடிந்தன
நீ.....
இல்லையென்ற பூபாளத்தோடு

அதே பொழுதுகள் பழக்கித்தரும்
நீ......
இல்லையென்ற முகாரியையும்!!!
>>>
வாழ்வின் யதார்த்ததை சொல்லும் வரிகள். ரசித்தேன்

அம்பலத்தார் said...

ஹேமாவின் கவி வரிகளுக்கு நான் அடிமை. ஒவ்வொரு கவிதையிலும் சொற்களும் பொருளும் பின்னிப்பிணைந்து ஆனந்தமான உணர்வுகளைத்தரும்.

Yaathoramani.blogspot.com said...

சிந்தனைத் திறனும் சொல்லாட்சியும்
பிரமிப்பூட்டுகன்ிறன
ஒவ்வொரு உவமையும் ஒவ்வொரு வரியும்
மலைக்கவைத்துப் போகையில்
எதைக் குறிப்பிட்டு பின்னூட்டமிடுவது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 11

கீதமஞ்சரி said...

சுயபச்சாதாபம் பீரிடும் வரிகள் மனதைப் பிசைந்தாலும் அந்த வரிகளில் வெளிப்படும் உவமை நயங்களும் ஊடாடிய சொல்லாடல்களும் ரசிக்கவைக்கின்றன, ஹேமா.

ராமலக்ஷ்மி said...

//உன்னைக் காணாத நாட்களெல்லாம்
சூரியனுக்கு விடுமுறை
பூமிக்கு அமாவாசை
பனிக்குளிருக்குள்
ஒற்றை உயிரையும் தொலைத்து
யுகம் துழாவும் நான்//

ரசித்த வரிகள். அழகான கவிதை ஹேமா. நினைவுகள் வருத்தினாலும் அத்தவிப்பிலும் சுகம் உண்டு எனும் விதமான தலைப்பும் அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

>>>தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
இருமுனையில் ஒருமுனை
உன்னிடம் என்றறியாமல்.

குட் ஒன் ஹேமா

arasan said...

வார்த்தைகள் ஊற்றாக பெருக்கெடுத்த வேகத்தில் சிக்கியது மென்மையான அழகிய கவிதை அக்கா ...
சில இடங்களில் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் ...

Unknown said...

//நினைவுகளையும் கனவுகளையும்
காலத்தால் சலித்தெடுக்க
மிஞ்சுவதெல்லாம்
அவசியமில்லா
சப்பைக் கற்களும் குப்பைகளுமே
காதலும் கூட//
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்!
காதலும் கூடவா?

M.R said...

உணர்வுகள் நிறைந்த கவிதை சகோ .படித்தேன் ரசித்தேன் ,ரசித்துப் படித்தேன்

Asiya Omar said...

//கருத்த கனவுகளுக்குள்
நினைவுகளைக் கரைக்க
காயங்களுக்கு மருந்து தந்து
விடியலைத் தள்ளி
வெளிச்சமாகிறது நிலவு.//

அருமை ஹேமா,வார்த்தை விளையாடல் உங்களுக்கு கை வந்த கலை..

Anonymous said...

எத்தனை உணர்வுகளை சொல்கிறது ஹேமா இக்கவிதை...காதல் மொத்தமும் சொல்லும் இவ்வரிகளை தென்றலாய் உணரவும் முடிகிறது தனலாய் சுடவும் செய்கிறது..எனக்குன்னு எழுதியது போலவும்..எடுத்து செல்கிறேன் அத்தனை வரிகளையும் என் உணர்வுகளும் பருகட்டும் சில நேரம்..

நிலாமகள் said...

அந்த‌ ஒற்றைப் ப‌ற‌வையின் ஏக்க‌க் கூவ‌ல் ... ம‌ன‌தைப் பிசைகிற‌து ஹேமா. நான் ர‌சித்து ர‌சித்து உள்வாங்கிய‌ வ‌ரிக‌ளையே ந‌ண்ப‌ர்க‌ளும் சிலாகித்திருப்ப‌தும் விய‌ப்பு.

http://thavaru.blogspot.com/ said...

ஹேமா உண்மையே சுகராகம் தான்..ம்ம்ம்...

Ashok D said...

பாவம்.. குழந்தைய புலம்ப விட்டாங்களே... பரவாயில்லை... நல்லா ஆரம்பிச்சு..கடைசி மூனு பேரா புலம்பலாயிடுச்சு...

அதனால் என்ன?.. காதல்ல எல்லாமே அழகு தானுங்களே :)

காட்டான் said...

வணக்கம் சகோதரி..

உங்கள் கவிதையின் பின்னூட்டங்களையும் படித்தால்தான் என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது... ஹி ஹி

//வெட்டிய வாழையில்
வெடிக்கும் குருத்தாய்
உன் நினைவுகள்.//

அருமையான உதாரணம்..!!

மாய உலகம் said...

கலங்கலான கண்ணீரோடு கலக்கலான வரிகள்...

போளூர் தயாநிதி said...

கவிமணியிடம் கேட்டேன்கவிதை என்பதென்ன ""உள்ளத்துள்ளது கவிதை நெஞ்சில் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில்"". என தொடருகிறார் . வள்ளுவரை காதல் என்பதென்ன என வினவ அட மடையா இது புரிய வில்லையா எழுதியுள்ளேன் படி ""கண்ணினை கண் நோக்கொக்க .."". என தொடர்கிறார் சிறந்த மயக்கும் பாடலான நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என கண்ணதாசன் ஒருபக்கம் வைரமுத்துவிடம் கேட்க உன்விழி உதயம் எனக்கு விடிவு தந்ததென வாய்பிலக்கிறார் அட காதல் என்பது இதனை செய்திகளை உள்ளடக்கியுல்லதா என வியந்த வேளை இங்குவர காதல்சாறு கொட்டி கிடைக்கிறது சிறப்பான வரிகள் வாழட்டும் காதல் உள்ளமெல்லாம் உலகமெல்லாம் பன்முகத்துடன் .....

நட்புடன் ஜமால் said...

பூபாளங்களும், முகாரிகளும் மெளனமாக கதறுகின்றன ...

மாலதி said...

ஒரு சிறந்த ஆக்கத்தை காண்கிறேன் உளம் பூரிக்கிறேன் சில ஆக்கங்கள் மற்றவர்களுக்காக எழுதபடுவது சில ஆக்கங்கள் தனக்காக எழுதப் படுவது இந்த ஆக்கம் எல்லோருக்கும் இது காதல் தேசத்தின் தூது பாராட்டுகள் ...

Thooral said...

//உன்னைக் காணாத நாட்களெல்லாம்
சூரியனுக்கு விடுமுறை
பூமிக்கு அமாவாசை
பனிக்குளிருக்குள்
ஒற்றை உயிரையும் தொலைத்து
யுகம் துழாவும் நான்
கனவை வரவழைக்க
வெப்பக் கருவியின் துணையோடு//
pirivin thuyar sollum varigal
arumai

மகேந்திரன் said...

மனதை ஊஞ்சலாட்டிவைத்த
இனிய சுகராகம்...

Post a Comment