*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, June 26, 2011

இருட்டான சூரியன்...

 

நடுநிசி இரவிலும்
பச்சை மஞ்சள் சிவப்பு விளக்குகளின்
சமிக்ஞைக்காகக் காத்திருக்கும்
வாகனமாய் நான்.
உனக்காக
நிற்கிறேன்
கவனிக்கிறேன்
தொடர்ந்தும்
காதலித்துக்கொண்டே
இறப்பேன்!


எந்த மாதிரியும்
என்னை அலட்சியப்படுத்த
நீ...
துணிந்தே இருக்கிறாய்
பரவாயில்லை விடு
உன்...
முத்த ஒப்பந்தத்திற்காகவே
காத்திருக்கும்
காலம் முழுதும்
என் கன்னம் !


எம் கையில் எதுவுமில்லையென்றேன்
"கையில் ரேகைகூடவா இல்லை"
கிண்டலாய்
சொன்னாய் சிரித்தபடி
நீ பிரிந்தபோதுதான் புரிந்தது
அதிஷ்டமில்லா
வெற்றுரேகையென !


எத்தனை பேசியிருந்தாலும்
காற்றில் கலந்த முத்தங்கள்
இன்னும்...
சில வேறு தவிர
தேடிப்பார்
மிஞ்சியிருப்பது
நான்...நீ
மிச்சம் மிகுதியாய்
நினைவுகள்
போதாதா
சாகும்வரை இது !


செத்துக்கொண்டே இருக்கிறேன்
பேச்சுக்களற்ற பூமியில்
உன்னைச் சந்திக்கிறேன்
இடைவெளி நிரப்பு
மிச்சமிருக்கும் சுவாசமெடு
பிச்சையாய்
ஒற்றை ஈரமுத்தமிடு
இனாமாய் என் உயிரெடு
உயிர்ப்பிக்க அல்ல
இப்போதெல்லாம்
உன்...
உதட்டில் விஷம்!


'கல்லுளி மங்கன்' என்றாய்
இல்லையென்றேன்
நம்பவுமில்லை
கல்லுக்கு
பால் வார்த்திருந்தாலாவது
குடித்து மிஞ்சியதும்
கக்கியிருக்குமோ
அன்பின் மிகுதியை!


தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!


செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !

ஹேமா(சுவிஸ்)

43 comments:

சத்ரியன் said...

//தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!//

ஹேமா,

நம்பிக்கையில் காத்திருத்தல் சுகமே!


//செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !//

இது கொடுமையான அனுபவம் ஆச்சே!

’காதல்’-னா சும்மாவா, மரணத்துடன் வாழ்வதுதான் காதலின் பரிசு.

சத்ரியன் said...

ஹேமா,

அந்த முதல் படம் கொடுத்தலை உணர்த்துவதற்கா? பெறுதலை உணர்த்துவதற்கா?

கொஞ்(சு)சம் குழப்பம்.

Mahan.Thamesh said...

செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !

இது கவிதையில் அழகாகவும் வாழ்கையில் கொடுமையாகவும் இருக்கும் சகோ

கவி அழகன் said...

நீண்ட கவிதை நன்றாக தொடக்கி நன்றாக முடிகிறது
வார்தைகள் சொற்கள் வித்தியாசமாய் அமைந்திருக்கின்றது
இந்த கவிதை நினைத்து நினைத்து வார்த்தைகளை தேடிப்பிடித்து எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

ஸ்ரீராம். said...

"நினைவுகள் போதாதா சாகும் வரை.."

நல்லது.

//"செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் "//

பிரமாதம்.

Unknown said...

நில்...கவனி...காதலி...

மேவி... said...

:)))))))))

Kousalya Raj said...

//மிஞ்சியிருப்பது
நான்...நீ
மிச்சம் மிகுதியாய்
நினைவுகள்
போதாதா சாகும்வரை இது !//

என்ன ஹேமா இது !

கவிதையில் சொல்வது கொஞ்சம்...வலியுடன் அனுபவிப்பது அதிகம்...

காதலில் இன்பத்தை விட துன்பம் அதிகம் இருந்தும் காதல் சுகமானது தானே...

தேர்ந்தெடுத்த படங்கள் கவிதைக்கு தனி அழகு சேர்க்கிறது ஹேமா !

vidivelli said...

//தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்..
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!//



arumaiyaana kavithai...
kaathal enraal ippadiththanea nanpi ippo....
valththukkal

தமிழ் உதயம் said...

காதல் துயரத்தோடு - அழகான கவிதையையும் அல்லவா தருகிறது. அருமையான கவிதை ஹேமா.

Anonymous said...

ஹேமா அத்தனை வரிகளையும் தனித்தனியா உணர முடிந்தது இந்த வரி சரியா சொல்லியிருக்காங்கன்னு அடுத்த வரி படிச்சா அதுவும் அப்படியே..பல முறை படிச்சேன்..கண்களில் கண்ணீர் காரணம் மட்டும் தெரியலைன்னு சொல்லமுடியலை...

Anonymous said...

//தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!
//

ம்ம்ம்ம்ம்ம்ம் உணர்கிறேன்

நிரூபன் said...

நடுநிசி இரவிலும்
பச்சை மஞ்சள் சிவப்பு விளக்குகளின்
சமிக்ஞைக்காகக் காத்திருக்கும்
வாகனமாய் நான்.
உனக்காக
நிற்கிறேன்
கவனிக்கிறேன்
காதலித்துக்கொண்டே இறப்பேன்!//

காதலில் காத்திருத்தல் தரும் சுகத்தினை....

மனதிற்குப் பிடித்த ஒருவரை எதிர்பார்த்த படி செத்து விடத் தோன்றும் என்று கூறுவார்களே, அத்தகைய ஒரு உணர்வினை இவ் வரிகள் வெளிப்படுத்தி நிற்கிறன.

நிரூபன் said...

எந்த மாதிரியும்
என்னை அலட்சியப்படுத்த
நீ...
துணிந்தே இருக்கிறாய்
பரவாயில்லை விடு
உன்
முத்த ஒப்பத்திற்காகவே
காத்திருக்கும் என் கன்னம்
காலம் முழுதும்!//

முத்தம் ஒப்பந்தம்..
அருமையான உவமையினைக் கையாண்டிருக்கிறீங்க....

நிரூபன் said...

எம் கையில் எதுவுமில்லையென்றேன்
"கையில் ரேகைகூடவா இல்லை"
கிண்டலாய்
சொன்னாய் சிரித்தபடி
நீ பிரிந்தபோதுதான் புரிந்தது
அதிஷ்டமில்லா
வெற்றுரேகையென !//

அடிங்....காதல் கவிதையூடாக அரசியலையும் சேர்த்துக் கிண்டல் பண்றீங்க போல இருக்கே....

எம் கையில் எதுவும் இல்லை....

கடைசி நேர யுத்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறது,

நிரூபன் said...

செத்துக்கொண்டே இருக்கிறேன்
பேச்சுக்களற்ற பூமியில்
உன்னைச் சந்திக்கிறேன்
இடைவெளி நிரப்பு
மிச்சமிருக்கும் சுவாசமெடு
பிச்சையாய்
ஒற்றை ஈரமுத்தமிடு
இனாமாய் என் உயிரெடு
உயிர்ப்பிக்க அல்ல
இப்போதெல்லாம்
உன் உதட்டில் விஷம்!//

இவ் வரிகளுக்கு மேல் வந்த முதலிரு பந்திகளும் காதலின் ஆரம்ப நிலையினை உணர்த்தி நிற்க,
இங்கே இவ் வரிகள் காதலில் தொடங்கும் விரிசலை உணர்த்தி நிற்கிறது..

நிரூபன் said...

தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!//

காதலின் பின்னரான- பிரிவின் பின்னர் சேர வேண்டும், மீண்டும் மனதிற்குப் பிடித்தவரின் அன்போடு வாழ வேண்டும் எனும் உணர்வுகளை இவ் வரிகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

நிரூபன் said...

செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !//

காதலின் வேதனை மிகு தருணங்களை வெளிப்படுத்த, இதனை விட வேறு வார்த்தைகள் தேவையில்லை.....

நிரூபன் said...

"இருட்டான சூரியன்..."//

இங்கே, இருட்டான சூரியனானது, தாமரையின் முக மலர்ச்சிக்கு ஒளி கொடுத்தாது, பிரிவுத் துயரினைக் கொடுத்து மறைந்து நிற்பதனை வெளிப்படுத்தி நிற்கிறது.

காதலின் பல பரிமாணங்கள் கொண்ட நிலையினை கவிதை உணர்வோடும், காதலோடும், பிரிவோடும் வெளிப்படுத்தி நின்றாலும், கீழ் வரும் வரிகள்

//உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !//

//
செத்துக்கொண்டே இருக்கிறேன்
பேச்சுக்களற்ற பூமியில்
உன்னைச் சந்திக்கிறேன்
இடைவெளி நிரப்பு
மிச்சமிருக்கும் சுவாசமெடு
பிச்சையாய்//

இவ் வரிகள் வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையினை நினைக்க வைக்கிறது அல்லது, அந்தக் கவிதையின் பாதிப்பினை இங்கே காட்டுகிறது எனலாம்.

Unknown said...

//செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !//
உணர முடிகிறது!

'பரிவை' சே.குமார் said...

பிரமாதம்.

vidivelli said...

அக்கா தமிழ்மணத்திலும்,இன்ட்லியிலும் எனது வலைப்பூவை இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை எப்படி என்று சொல்ல முடியுமா?

கலா said...

ஹேமா,

அந்த முதல் படம் கொடுத்தலை
உணர்த்துவதற்கா? பெறுதலை
உணர்த்துவதற்கா?

கொஞ்(சு)சம் குழப்பம்\\\\\\\
என்னது! காதல் மன்னருக்கே புரியவில்லையா?

கொடுத்துக் கொண்டிருந்தகாதல்
மறைந்து {இருட்டானதைக்} கவனிக்கவில்லையோ!
நீங்கள்?
அந்த “இரு”தயங்களை உற்று நோக்கிங்கள்....
பெண்மனதில் வாடாமல்..மறையாமல்...இன்னும்
இரத்தோட்ட உணர்வுகளுடன் பசுமையாய்.க்..
கொடுத்துக் கொண்டே இருக்கிறது....

ஆண்னின் இதயம் கறுத்தே கிடப்பதைப் பாருங்கள்
இருந்தவைகள் அத்தனையும் இருன்டே விட்டதுபோலும்...
அதாகப்பட்டது,,,,,...மன்னா,
இந்தப் பாடுபடுத்தும் அந்தக் காதல்:
பெண்மனதில் இருக்கிறது
ஆண்மனதில் இல்லை அவ்வளவே!

“ஆண்கள் மனமே அப்படித்தான்_அது
அடிக்கடி மாறும் இப்படித்தான்.



கெட்டிக்காரக் ஹேமா படங்களை எவ்வளவு
பொருத்தமாய்த் தேர்வுசெய்திருக்கிறார்
அதுசரி..அதெப்படி ஹேமா போட்ட உடனையே..ஆஐர்?

மோகன்ஜி said...

ஹேமா சரியான வார்த்தைகள் வந்தமர்ந்து கவிதையை நகர்த்துகின்றன.. ஓரிரு மிகைவரிகள் கவிதையின் வேகத்தை சற்று மட்டுப்படுத்துகின்றன.அவை இல்லாமலே கூட கவிதை முழுமையாய் இருந்திருக்கும்.

ஹேமா! இன்று மீண்டும் கிசுகிசு போட்டிருக்கிறேன்.. நீயிருக்கிறாய்!

கலா said...

ஹேமா தலேப்பே,கவியின் அடக்கம்
நடுநிசி இரவிலும்
பச்சை மஞ்சள் சிவப்பு விளக்குகளின்
சமிக்ஞைக்காகக் காத்திருக்கும்
வாகனமாய் நான்\\\\\\
ஓஓஓஓ...இப்போது கைத்தொலைபேசியில்
மிஸ்ட்காலும் எஸ்,எம், எஸ்ஸும்
வருவதில்லையா?
பாவம்!தொலைபேசி வாடிக்கிடக்கிறது

கலா said...

உன்
முத்த ஒப்பத்திற்காகவே
காத்திருக்கும் என் கன்னம்
காலம் முழுதும்\\\\\
கொடுத்ததாகவோ,எடுத்ததாகவோ....
இதுபற்றி “யாரும்” எனக்குச் சொல்லவே இல்ல....
சே... மறைக்கலாமா?

கலா said...

கையில் ரேகைகூடவா இல்லை"
கிண்டலாய்
சொன்னாய் சிரித்தபடி\\\\\\

எத்தனை பேசியிருந்தாலும்
காற்றில் கலந்த முத்தங்கள்
இன்னும்...\\\\\\

இப்போதெல்லாம்
உன் உதட்டில் விஷம்!\\\\

தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ\\\\\

ஹேமா,{இவ்வரிகள்} எனக்குப் பிடித்தவைகளை
உன்னிடமிருந்து
எடுத்துவிட்டேன். அகழ்வாராட்சி செய்வதற்கு!!

கலா said...

மறையும் சூரியன் என்று தெரிந்தும்.
“நிலா” மங்கை காதலிக்கலாமோ?

நாட்டுக்கு “நாடு” உதயம் வித்தியாசப்படும்
அல்லவா! இப்போது எங்கு “உதித்தான்”சூரியன்
என்றாவது தெரியுமா?கணி!!

மறைந்தது சூரியன் அல்ல...

நம்பும் “மதி” யை மற.....

Unknown said...

தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!

எளிய சொற்கள் இனியநடை
இவை உணர்த்தும் வேதனையின்
வெளிப்பாடு
நன்றி, வளரட்டும் சிறப்போடு

புலவர் சா இராமாநுசம்

சுதா SJ said...

ஆழமான வரிகள்
மனசை தொடும் கவிதை

சுதா SJ said...

//செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !//

பலருக்கு காதல் கொடுக்கும் விலை மதிப்பற்ற பரிசு அல்லவா இது

சுதா SJ said...

//மிஞ்சியிருப்பது
நான்...நீ
மிச்சம் மிகுதியாய்
நினைவுகள்
போதாதா சாகும்வரை இது !//

ம்ம் விரக்தியின் உச்சம் இது

Bibiliobibuli said...

ஹேமா, கவிதை சில இடங்களில் நின்று கொல்கிறது. எனக்கு இவ்வளவு கவிதைத்தனமா சொல்லத்தெரியாது. இருந்தாலும் காதலித்தால் திரும்ப காதலி, புறக்கணித்தால் அதையே நீயும் செய். இதுதான் யதார்த்தம். ஒருவர் மற்றொருவரை புறக்கணிப்பதால் வாழ்க்கை அத்தோடு முடிந்துபோவதில்லை. வாழ்க்கையில் காதலும் கடந்து போகும். அவ்வளவே என் கருத்து.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

குணசேகரன்... said...

உங்களின் ஒவ்வொரு கவிதையும் மன உணர்வுகளை தொடுகிறது.பகிர்தலுக்கு நன்றி.

jeyam said...

awesome hema.....
i love your thoughts......

கருணாகார்த்திகேயன் said...

நிறைய வரிகள் வலிக்கிறது ...

நிறைய எழுதவும்

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

தனிமரம் said...

ஏக்கத்தையும் காதலையும் விடமாட்டீர்கள் போல!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !//
அருமை ஹேமா. அடி மனதைத் தொட்டுப் போகும் பல வார்த்தைகள்!
எந்த வரியைப் பாராட்டுவது என்று தடுமாறுகிறேன்.
பல நாட்கள் ப்ளாக் பக்கம் வராததில் நட்சத்திர வாரத்தை தவற விட்டு விட்டேன்.
இன்று எல்லாவற்றையும் சேர்த்துப் படிக்கிறேன்.

மாலதி said...

செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !இது கவிதையில் அழகாகவும் வாழ்கையில் கொடுமையாகவும் இருக்கும்

Natu said...

செத்துக்கொண்டே இருக்கிறேன்
பேச்சுக்களற்ற பூமியில்
உன்னைச் சந்திக்கிறேன்
இடைவெளி நிரப்பு
மிச்சமிருக்கும் சுவாசமெடு
பிச்சையாய்
ஒற்றை ஈரமுத்தமிடு
இனாமாய் என் உயிரெடு
உயிர்ப்பிக்க அல்ல
இப்போதெல்லாம்
உன்...
உதட்டில் விஷம்!


Very nice line super
By
Bhuvana

ரிஷபன் said...

நீ பிரிந்தபோதுதான் புரிந்தது
அதிஷ்டமில்லா
வெற்றுரேகையென !

வழக்கமாய் பேசும் வார்த்தைகளின் பின் முறிந்து போன இதயத்தின் அலறல் எத்தனை துல்லியமாய் ஒலிக்கிறது..

Anonymous said...

எந்த மாதிரியும்
என்னை அலட்சியப்படுத்த
நீ...
துணிந்தே இருக்கிறாய்
பரவாயில்லை விடு
உன்...
முத்த ஒப்பந்தத்திற்காகவே
காத்திருக்கும்
காலம் முழுதும்
என் கன்னம் !
என்ன ஒரு உயிரோட்டமான வரிகள். கெஞ்சி கெஞ்சி கேட்டு அவள் அலட்சியப்படுத்துவதையும் தாங்கி கிட்டு ஒருநாள் அவள் மனம் நெகிழ்ந்து உதடுகள் பரிமாறும்போது கிடைக்கும் சுகமே தனிதான்.அதை அனுபவித்து உணரவேண்டும்.

Post a Comment