*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, June 24, 2011

கள்ளக் கோழி...

இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு.

ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து
போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.
ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே.

என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...!

சும்மாயிருங்கோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்.

அடி விசரி நீயும் உன்ர கோழிக்கனவும்....!

நீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே.

என்னவாலும் செய்து துலை. இங்க ஆராச்சும் படலை திறந்து வம்பு சண்டைக்கு வராம இருந்தாச் சரி.எப்பதான் நான் சொன்னதைக் கேட்டிருக்கிற நீ.நான் உன்னைக் கட்டி...உன்ர கொப்பருக்கு உதைக்கவேணும்.பாவம் வயசு போட்டுது எண்டுதான் பேசாமலிருக்கிறன்.இல்லாட்டி....

இல்லாட்டி இல்லாட்டி....கோழி பிடிக்கிறதுக்கும் அப்பருக்கும் ஏன் முடி போடுறியள் இப்ப...

அடி போடி கொப்பரை உதச்சு எதுக்கு.கள்ளக்கோழி அமத்திற
ஆக்கள்தானே நீங்கள்.....சரி சரி விடு !


இரண்டு மாசம் போனபிறகு....


ஏனப்பா ஆரெண்டாலும் தேடினவையே அந்தச் சிவப்பியை.சரியப்பா இண்டைக்குப் போய் அவள் சிவப்பியைக் கொண்டு வந்து விடுவமே.எதுக்கும் வேற கலர் பெயிண்ட் அடிச்சுக் கொண்டு வந்து விடுவமேப்பா.

நாசமாப் போக நீ.ஏன் அதைச் சாகடிக்கச் சொல்றியே.அதுக்குத்தானே அண்டைக்கே
சொன்னனான் சட்டிக்க வைப்பமெண்டு.

ஏனப்பா பெயிண்ட் அடிச்சா என்ன.எங்கட புதுக்கோழியெண்டு
சொல்லலாமெல்லோ.உங்களுக்கு அறிவே இல்லையப்பா....

ஓமடி....ஓமடி உனக்கு நிறைஞ்சு வழியுது அறிவு.சும்மா கலர் அடிச்சா மழையில கழுவுப்பட்டுப் போகாதே.சரி கழுப்படாத பெயிண்ட் எண்டா கோழியிண்ட றெக்கை (இறகு) ஒட்டிக்கொள்ளுமெல்லே.

ஓம் எனக்கு விசர்தான்.எனக்கு யோசிக்க வரேல்லத்தானப்பா.சரி பின்னப் போய் கொண்டு வாங்கோ.அதை இப்ப அடையாளம் கண்டு பிடிக்க மாட்டினம்.அது வளந்திட்டுதப்பா.


கோழி கொண்டு வந்துவிட்ட கொஞ்ச நாளான பிறகு பிறகு....


இஞ்சாருங்கோப்பா....எங்கட சிவப்பியக் கவனிச்சீங்களே.உந்த வெள்ளடியன் சிவப்பிட்ட இங்க வருமெண்டு பாத்தா சிவப்பிய மெல்ல மெல்ல தன்ர வீட்டையெல்லே கொண்டு போய்ச் சேர்க்குது.ஒருக்கா அவையளிட்ட சொல்லி இஞ்சால கலைச்சுக்கொண்டு வாங்கோப்பா.நல்ல வடிவா வந்திட்டுது.நான் போய்க்கலைக்க என்னை உச்சுக் காட்டுது.இப்பிடியே அங்க பழகிட்டுது எண்டா அங்கயெல்லே முட்டை போடப்போகுது.நானும்
அடை வைக்கவெண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறன்.

ஓமடியப்பா நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்.இப்பெல்லாம் அங்கதான் மினக்கெடுது எடுபட்டுப் போகப்போகுது.எவ்வளவு கஸ்டப்பட்டு சாப்பாடும் போட்டு
வளத்துக்கொண்டு வாறம்.ஆனா ஒண்டு இந்தச் சாட்டில உன்ர கொம்மாவும் கொப்பரும் ஒரு கணக்கு ஒதுக்கிப் போட்டினம் இருக்கட்டும் அவையள்.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.என்னையும் கள்ளக்கோழி மாதிரியெல்லே அமுக்கிப் பிடிச்சனியள்.

ஓஓ...பெடிக்கும் கல்யாணம் செய்து குடுக்கப் போறம்.இப்பத்தான் உங்கட செருக்குக் கதை.வாயை மூடிக்கொண்டு கோழியைக்கலைச்சுக்கொண்டு வாருங்கோ முதல்ல.தம்பி அடுத்தமாசமளவில வாறனெண்டு சொன்னவனப்பா போன்ல.நான் சொல்ல மறந்திட்டன்.வந்தா இனி கொழும்புப் பக்கத்துக்கு விடாம இஞ்சனைக்க ஒரு வேலையப் பாத்துக்கொண்டு இருக்கச் சொல்லவேணும்.

எப்ப எடுத்தவன் தம்பி.எப்ப வாறானாம்.உது சரிவராது.இரு பிடிச்சுக்கொண்டு வாறன்.ஆக மிஞ்சிப்போச்சுதெண்டா தம்பி வந்து நிக்கேக்க கையைக் காலை முறிச்சுச் சட்டிக்கதான் வைக்கவேணும்.

இஞ்சப்பா கொதி வரப்பண்ணாதேங்கோ.சும்மா கறி...சட்டி எண்டுகொண்டிருக்காம போய்த் துரத்திக்கொண்டு வாங்கோ.

போய்க் கொஞ்ச நேரத்தில திரும்பி வாறார்....


இஞ்சாரப்பா....அங்க எங்க காணேல்ல சிவப்பியை.வெள்ளடி மட்டும்தான் நிக்குது.
வெங்காயமடி நீ...சொல்லச் சொல்லக் கேக்கேல்ல.அவளவை சட்டிக்க வச்சுப்போட்டாளவைபோல.இப்ப எனக்கும் இல்ல உனக்கும் இல்ல.....

என்னப்பா சொல்றியள்.நானும் 2-3 நாளாக் கவனிக்கேல்லத்தான் நானும்.கோதாரி போக அவளவை.வயிறு அவிஞ்சு கொள்ளையில போக.பாப்பம் இண்டைக்கு பொழுதுபட அடைய வருதோவெண்டு.


கோழி இரவாகியும் வரேல்ல மரத்தில அடைய. .....


அடுத்த நாள்...உந்தக் கோடாலி எங்கயப்பா.உந்த முருங்கை மரத்தை வெட்டிச் சரிக்கிறன்.பாவங்களெண்டுதான் விட்டு வச்சனான்.முழுக்கொப்பும் இஞ்சாலதான் சரிஞ்சு கிடக்கு.அவ்வளவு குப்பையும் நாங்கள் நித்தமும் கூட்டி அள்ளுறம்.அங்கனேக்க ஒண்டிரண்டு முருங்கக்காயைத் தானே நாங்கள் பிடுங்கிறம்.கீரையும் எப்பாலும் ஒடிச்சு எடுக்கிறம்.அவளவை எங்கட முழுக்கோழியையே திண்டு போட்டாளவையே.

சும்மா இரடி லூசி.....என்ன என்ன எங்கட கோழியோ....நல்ல பகிடிதான்.உந்த முருங்கை மரம் மாமரத்தால எங்களுக்கு எவ்வளவு லாபம்.இரவில கோழிகள் 2 அதிலதான் அடையுது.இரவோடஇரவா எவ்வளவு மாங்காயை பிடுங்கி வித்தனி.உதுகளை விட்டு
வச்சிருக்கிறபடியால்தான் எங்கட 2 தென்னைமரத்தை விட்டு வச்சிருக்கிறாள் சுமதி.தேங்காய் அவைன்ர கிணத்துக்கையெல்லே அடிக்கடி விழுது.எத்தனை தரம் சொல்லிப்போட்டு விட்டு வச்சிருக்கிறாள்.கோழியைக் காணேல்லயெண்ட கவலை எனக்கு மட்டும் இல்லையே.


பொறுங்கோ பொறுங்கோ நான் கண்டு பிடிக்கிறன் கள்ளரை.நாசம் விழ அவையளின்ர தலையில.நாளைக்கே போய் சாத்திரம் கேக்கிறன்.

மண்டைக்க சரக்கேதாலும் கிடக்கே உனக்கு.நல்லாப் போய்க் கேளு.எங்கப்பன் கொல்லைல இல்லயெண்டு சொல்ற மாதிரி கள்ளி நீதான் எண்டு சாத்திரி சொல்லும்.
ஏனெண்டா கோழி எங்கடையில்லை.சும்மா கிடவடி.

இல்லையப்பா உவையளை விடப்படாது.கள்ளர்கூட்டம்.பாருங்கோவன் சரியாக் கண்டுபிடிச்சணெண்டா செய்வினை செய்து கையை அழுகப்பண்ணாட்டி நான் ...நான் இல்லை.சொல்லிப்போட்டன்.

எடி விசரி...எப்பிடியடி கண்டு பிடிப்ப.சும்மா புலம்பாதை.எங்களிட்ட தானா வந்த கோழிதானே.விடு.அவளவை கோழி இறக்கையைக்கூட குப்பையோட குப்பையா எரிச்சுக் கொளுத்தியிருப்பாளவை.அவையளை நான் வேற வழியால சரிப்படுத்துறன்.

உந்தக் கோழியின்ர யோசனைல வந்த கடிதத்தையும் மறந்திட்டன்.இந்தாப்பா தம்பியின்ர எழுத்துப்போல கிடக்கு.ஏன் போன் எடுக்காம கடிதம் போட்டிருக்கிறான்.

அதப்பா நான் அண்டைக்க்குக் கதைக்கேக்க இப்ப கிட்டடியில எடுத்த
போட்டோவொண்டு அனுப்பச் சொல்லிக் கேட்டனான்.அதாத்தான் இருக்கும்.இஞ்ச தாங்கோ.

அன்புள்ள அம்மாவுக்கு சுகம் சுகம்தானே.இன்னும் இரண்டு கிழமைல வாறன் உங்க.அம்மா அப்பா கொழும்பில இருந்து என்ன வாங்கிக்கொண்டு வரவேணும் நான்.சொல்லுங்கோ.கொண்டு வாறன். நானும் சாமான்கள் வாங்கி வச்சிருக்கிறன்.
அப்பாவுக்கு ஒரு போனும்கூட.அம்மாவுக்கு கிரண்டரும் புது மொடல்ல.

அம்மா உங்களிட்ட நான் ஒண்டு சொல்லவேணும்.அம்மா நீங்கள் எனக்குக் கல்யாணம் பேசவெண்டு சொன்னியள்.நான் சொல்லப்போறதைக் கேட்டு கொஞ்சம் மனவருத்தம் உங்களுக்கு வரலாம்.அம்மா நான் இங்க ஒரு பிள்ளையக் காதலிக்கிறன் கொஞ்சக் காலமா.அவளைத்தான் கல்யாணம் செய்யவெண்டு சத்தியம் பண்ணிப்போட்டன்.நான் வரேக்க கூட்டிக்கொண்டு வாறன்.நல்ல வடிவாயிருப்பளம்மா.பழகிப் பாத்திங்களெண்டா உங்களுக்கும் பிடிக்கும் அவளை.திடீரெண்டு கூட்டிக்கொண்டு வந்தா உங்களுக்கு அதிர்ச்சியாப்போடும் எண்டுதான் இப்பவே சொல்றன்.ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.

சரியாப்போச்சு....தலையில இடி விழுகிறமாதிரி உவன் என்ன எழுதிருக்கிறான் எண்டு பாருங்கோப்பா.வீடு வாசல் நகை நட்டெண்டு நான் நல்ல சீதனத்தோட இஞ்ச கல்யாணம் பேசிக்கோண்டு தரகர்மாருக்கும் அள்ளிக்குடுத்துக்கொண்டு திரியிறன்.
நாசமா போறன் எண்டு உந்தப் பெடி என்ன சொல்லுதெண்டு.

உதுக்குத்தான் சொன்னனான் கொழும்புப் பக்கம் அனுப்பாதயெண்டு.உனக்கு எல்லாத்திலயும் பேராசை.நல்ல சம்பளம் நல்ல வேலையெண்டு ஒற்றைக்காலில அவனோட ஒத்துப்பாடிக்கொண்டு அனுப்பின.அனுபவி.உதுக்கு நான் என்ன சொல்லக் கிடக்கு. எவளைக் கூட்டிக்கொண்டு வாறானோ.பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ.சரி கோழி துலைஞ்சமாதிரி திரும்பி எங்களிட்டயாவது வாறானே.அதுவே போதும் சந்தோஷம்.விடு.


அடுத்த பதினைஞ்சு நாள் போக...


தம்பி இண்டைகெல்லேப்பா வாறனெண்டவன்.சரி அவனுக்குப் பிடிச்சதாச் சமை.இப்ப என்ன அவன் அவளாரோ ஒருத்தியையும் கூட்டிக்கொண்டுவாறான்.கதைச்சுப் பாப்பம்.புலம்பாமச் சமை அவன் வந்திடுவான்.மெல்ல மெல்ல மாத்திப்போடலாம் அவனை.


சமையல் நடந்துகொண்டிக்கும்போதே ஒரு ஆட்டோ வந்து நிக்குது.....


இஞ்சப்பா தம்பி வந்திட்டான் போல.இந்த அடுப்பை பாத்துக்கொளுங்கோ.சீலையச் சுத்துக்கொண்டு ஓடி வாறன்.சொன்னதைவிட நேரத்துக்கு வந்திடான்போல.வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு வாங்கோ.உங்க பக்கமெல்லாம் விடுப்புப் பாக்கும் சனம்.

ஆட்டோவிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் மகன் தன் ஒன்றரை வயதுக் குழந்தையோடு வந்து இறங்குகிறான்.வந்த மகனோடு பேசிச் சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கேக்க சிவப்பியும் 6 குஞ்சுகளோட வேலி நுழைஞ்சு வளவுக்குள்ள வந்துகொண்டிருக்குது.

ஏதோ என்னால.....இவ்வளவுதான் நகைச்சுவை முடியுது !

கதையின் சுருக்கம்....

புதுசாய் ஒரு கோழி எப்பவும் எங்கள் வீட்டில உலவுது.ஒரு கிழமைக்குப் பிறகு வீட்டுக்காரம்மா சொல்றா கோழியொன்று புதுசா எங்கள் கோழிகளோடு உலவுது.இடம் பெயர்ந்தவர்களின் கோழியாக இருக்கலாம்.இன்னும் 2-3 நாள் பார்த்துவிட்டு எங்கள் அம்மா வீட்டில் கொண்டு போய்விட்டு வருவோம். வளர்ந்தபிறகு கொண்டுவரலாம்.பக்கத்துவீட்ல நல்ல இனச் சேவல் ஒன்று நிற்குது.அதன் பரம்பரை எங்கள் வீட்லயும் வேணும்.பக்கத்துவீட்டுக்காரம்மா அவங்க வீட்ல ஒரு முட்டை அடை வைக்கக் கேட்டுக் குடுக்கல.அதனால இந்தக் கோழியோடு இணைந்தால்....கற்பனை.வீட்டுக்காரர் அடிச்சுச் சமைக்க நினைக்கிறார்.அவ இல்லைன்னு அவங்க அம்மா வீட்ல கொண்டு விட்டு 2 மாசம் கழிச்சு கொண்டு வந்து விடறா.

சேவல் இங்க வரும்ன்னு பாத்தா சிவப்பிதான் அங்க போய் எப்பவும் நிக்குது.திடீர்ன்னு ஒருநாள் சிவப்பியைக் காணோம்.ஊர்ல எங்க வீட்டு மரம் அடுத்தவீட்ல தலை நீட்டினா....சண்டைதானே.கோழி தொலஞ்சதில சின்னதா அதிலயும் குழப்பம்.முருங்கை மரம் மாமரம் இவங்கவீட்ல தலை நீட்டுது.இவங்க அதில களவாயும் தெரிஞ்சும் பயன் எடுத்துக்கிறாங்க.இவங்க தென்னை மரம் அவங்க கிணத்தை அசுத்தப்படுத்துது.

கோழியை அவங்கதான் பிடிச்சு சமைச்சிருப்பாங்கன்னு சந்தேகப்பட்டு இந்தப் பக்கம் வரும் கொப்புகளை வெட்ட வெளிக்கிட்டு அப்புறம் தென்னை மரத்தை நினைச்சிட்டு விட்டு வைக்கிறாங்க.சாத்திரம் கேட்க நினைச்சிட்டுப் போகல.காரணம் சாத்திரி இவங்க்ளையே கள்ளர்ன்னு சொல்லிடுவார்ன்னு பயம்.

இப்பிடியிருக்கும்போது கொழும்பிலிருக்கும் மகன் தான் ஒரு பெண்னைக் காதலிப்பதயும் கூட்டிக்கொண்டு வந்து காட்டிப் பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்கப்போவதாயும் திடீரென்று வந்தால் அதிர்ந்துபோவார்கள் என்று போனிலயும் சொல்லமுடியாமல் கடிதம் போட்டிருக்கார்.

திட்டிக்கொண்டாலும் மகனின் வரவை எதிர்பார்த்திருக்கார்கள்.மகனும் வந்தார்.ஒரு வெள்ளைக்காரப்பெண் ஒரு குழந்தையுடனும்.அதே நேரம் சிவப்பியும் 6 குஞ்சுகளோடு வளவுக்குள் நுழைகிறது.கிராமப் பக்கங்களில் பற்றைகளுக்குள் கோழிகள் அடை காத்துக் குஞ்சுகளோடு வருவதுண்டு.அந்த 21 நாட்களும் சில வீடுகளில் சந்தேகத்தால் பக்கது வீட்டிக் காரர்களோடு பெரிய சண்டையே நடக்கும்.கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.சரியோ.......யோயோயோயோயோ !


ஹேமா(சுவிஸ்)

62 comments:

சத்ரியன் said...

//பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ...//

ஹேமா,

நெசமாளுமே நல்லா இருக்குதுங்க. என்ன ஒன்னு நாங்க யாழ் தமிழில படிச்சு தமிழ்னாட்டு தமிழுக்கு மொழிபெயர்த்து புரிஞ்சிக்க கொஞ்சம் நேரம் எடுக்குது.

பரவாயில்லையே. செலவில்லாம , கலியாணம் கட்டி, குட்டியும் போட்டிருக்குதுகள் உங்கட கள்ளப் பிள்ளையள்!

Unknown said...

வழக்கு மொழியில் கலக்குறீங்க....

ஸ்ரீராம். said...

அசத்திட்டீங்க ஹேமா...பேச்சு வழக்கே சில இடங்கள்ள கவிதை நடையா மாறிடுது...சுவாரஸ்யமாப் படிச்சேன்.

Unknown said...

ஹிஹி நம்ம மொழி வழக்கில்...அருமை

Kousalya Raj said...

படிக்கும் போது இசைப்பது போல இருந்தது தமிழ்...புரிந்து கொள்ள நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் மிக ரசனையாக இருந்தது ஹேமா !

இராஜராஜேஸ்வரி said...

ரசனை மிகுநத சங்கீதமாய் சொற்கள் கோலம் போட அருமையான கதை. பாராட்டுக்கள்.

மேவி... said...

ஹேமா, இன்னுமொரு வாட்டி படிக்கணும் ...அப்ப தான் புரியும். இப்ப டைம் இல்லை . பிஸி. பிறவு படிக்குறேன்

Bibiliobibuli said...

ஹேமா, இலங்கை தமிழ் வானொலி கேட்டமாதிரி கிடக்கு. ஆஹா, எங்கட தமிழ்ல ஓர் கதை.

எங்கட அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள்............ம்ம்ம்ம்... என்னத்த சொல்றது.

எங்கட ஊரில சிவராத்திரி எண்டால் முதல்ல காணாமல் போறது கோழி தான். அடுத்த நாள் கோழிக்கு சொந்தக்காரர் தேடிக்கொண்டு திரிந்தால், பெடியள் சொல்றது உங்கட கோழி தானே இப்பத்தான் அங்கின கண்டனான் எண்டு. இவ்வளவுக்கும் சிவராத்திரிக்கு கோழிக்கறி சாப்பிட்டவனில் அவனும் ஒருத்தனா இருப்பன்.

சி.பி.செந்தில்குமார் said...

உங்க இலங்கைத்தமிழ் அழகா இருக்கு.. ஆனா பாதி புரியலை ஹி ஹி

vidivelli said...

நல்லாய்த்தான் போகிறது கதை
நண்பி...அருமை
வாழ்த்துக்கள்.......



எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........

தமிழ் உதயம் said...

எதிர்பார்த்த பதிவு. ரெம்ப நாளாகவே ஈழத்தமிழில் உங்கள் படைப்பு ஒன்றும் வரவில்லையே. நன்றாக இருந்தது ஹேமா.

Unknown said...

மண்வாசனை! :-)

sathishsangkavi.blogspot.com said...

இலங்கைத் தமிழ் அருமை...

தனிமரம் said...

சுவாரசியமான கதையாக்கி தொலைந்து போன கிராமத்தையும் அயல் வீட்டு கோழிச் சண்டைகளையும் அசைபோட விட்டிருச்சு உங்களின் குறும்பான கோழியைச் சுற்றிய கதை.வாழ்த்துக்கள் சிரிப்புக்குப் பஞ்சம் இல்லை கடைசியில் சீதனம் பற்றிச் சொல்லவேயில்லை நீங்கள் ஹேமா!
முன்னர் எத்தனை பேர் இப்படி சின்னச் சின்ன சண்டையும் சமாதானமாகப் போன அயல் வீட்டு வாழ்க்கை இப்போது அடுக்கு மாடியில் வருமா?

நிலாமகள் said...

க‌தை நாய‌கி க‌டைசியில் சிவ‌ப்பியையும் ம‌க‌னையும் ஏற்றுக் கொள்ள‌த்தான் போகிறாள்... புல‌ம்பிய‌ப‌டி. உங்க‌ள் நாவில் த‌மிழின் அழ‌கு ச‌ற்று அதிக‌மாய். ஆங்காங்கு யதார்த்த‌மான‌ ந‌கைச்சுவையோடு அருமையான‌ சித்திர‌மாய் எங்க‌ளுக்கு த‌ந்திருக்கீங்க‌ ஹேமா... வாழ்த்துக‌ள்!

சாந்தி மாரியப்பன் said...

அழகுத்தமிழில் அருமையான இடுகை.. அப்டியே இலங்கை வானொலியில் நாடகம் கேட்ட நாட்களை ஞாபகத்துக்கு கொண்டுவந்துடுச்சு :-)

சக்தி கல்வி மையம் said...

இந்த தமிழ் படிக்க நல்லா இருக்கு..

Anonymous said...

புரியலை ஹேமா எனக்கு...

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

கள்ளக்கோழி அருமை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஏதோ இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கதைநேரத்தில் நீங்கள் கதை சொன்னது போல தமிழில் ஒரு கிறக்கம் மயக்கம்.உங்கள் தமிழின் குளிர்ச்சி எந்தத் தமிழுக்கும் வராது.

கோழி சமாச்சாரமும் நல்ல சிரிப்பைக் கொடுத்தது ஹேமா.

அன்புடன் நான் said...

பகடியா கெடக்கு....

நல்லாயிருக்குங்க...

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு உங்க தமிழ் நடை நல்லா பிடிச்சிருக்குங்கோ...

கவி அழகன் said...

வாசிக்க வாசிக்க ஊரில நிக்கிற மாதிரி உணர்வு

நிரூபன் said...

வணக்கம் அக்காச்சி,
இருங்கோ படித்து விட்டு வருகிறேன்,

தலைப்பே பொருள் மயங்கி நிற்கிறது.

ஊரில கள்ளக் கோழி பிடிக்கிறதென்று சொல்லுவீனம்...
கேள்விப்பட்டிருக்கிறீங்க தானே...

நிரூபன் said...

இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு.//

ஹேமா வெட்கத்தை விட்டுச் சொன்னால்...

பசங்க நாங்கள்.. மேற்படி வர்ணனையினை,
வீதியில் சைட் அடிப்பதற்காக நிற்கும் போது...யூஸ் பண்ணியிருகிறோம்.
அந்த கோழி வேற...

நீங்க சொல்லுற இந்த கோழி வேற..

ஹி...ஹி...

நிரூபன் said...

மப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து
போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.
ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே.//

இது தான், தமிழனின் குறுக்குப் புத்தி...

எப்பவுமே இடக்கு முடக்கா யோசித்து எப்படா மற்றவங்க பொருளை அபகரிப்பம் என்று இருப்பாங்க..

ஹி...ஹி...

நிரூபன் said...

ஆரம்ப வரிகளிலே ஊர் மணம் கமழ அழகாய்ப் படைத்திருக்கிறீங்க.

புலத்தில் பல காலம் இருந்தாலும், எம் தமிழின் நினைவோடு இருக்கிறீங்க என்பதனை நிரூபிக்கிறீங்க..

வாழ்த்துக்கள்...

நிரூபன் said...

என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...!//

அடிங் கொய்யாலா...
சும்மா வீட்டில இருக்கிற ஆம்பிளையளையும் கெடுக்கிறது, இந்தப் பொம்பிளையள் தான்..(பெண்டுகள் தான்)

நம்ம ஊரிலை, அடுத்த வீட்டுக்காரனோடை கோழி, எங்களின் காணிக்குள் வந்தாப் போதும்,
வீட்டிலை கட்டி வைச்சிருக்கிற நாயை
‘உச்சுக் காட்டி விட்டுக் கூடக் கோழி பிடிச்சிருக்கிறாங்கள்.....

ஐயோ..ஐயோ...

நிரூபன் said...

சும்மாயிருகோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்.//

எப்ப பார்த்தாலும், தூர நோக்கோடு வாரிச் சுருட்டி.....அள்ளுற குணம் தான் பெண்களுக்கு என்பதனை நிரூபிக்கிறீங்க...
ஹி....ஹி....

நிரூபன் said...

அடி விசரி நீயும் உன்ர கோழிக்கனவும்....!

நீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே.//

ஆகா..
பக்கத்து வீட்டுக்காரியுடன் ஏற்பட்ட குரோதமா இதற்கெல்லாம் காரணம்....

நடக்கட்டும், நடக்கட்டும்.

வந்தியத்தேவன் said...

ஹாஹா கலக்கல், ஈழத்துமுற்றத்தில் நட்சத்திரவாரம் முடிய மீள்பிரசுரம் செய்யவும்.

Kanchana Radhakrishnan said...

கலக்குறீங்க....

Admin said...

வாசிக்க... வாசிக்க.. திரும்ப.. திரும்ப.. வாசிக்கணும் போன்று இருக்கின்றது. கிராமிய மொழிநடை மூன்று தடவை வாசித்தேன்.

அருமை

Unknown said...

முதலில்
நன்றி ஹேமா நன்றி
கள்ளக் கோழியின் உதவியால்
யாழ்ப்பாணச் செல்லத் தமிழை
ஏன, வெல்லத தமிழை ஓரளவு
காணவும படிக்கவும் முடிந்தது
தட்டுத் தடுமாறி ஆனால
தடம் மாறாமல் படித்தேன்
இன்னும் பல இதுபோல்
தர வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் ஹேமா!

மிக அருமையான, ஈழத்து பேச்சுவழக்கில் அமைந்த சிறுகதை ஒன்றினை படிக்கும் வாய்ப்பினைத் தந்தமைக்கு முதலில் நன்றிகள்!

கதையில் பல அரிய விஷயங்களைப் புகுத்தியிருக்கிறீர்கள்!ஒவ்வொன்றாக விளக்குகிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்கள் கையாண்ட மொழியினை பலர் பாராட்டி இருக்கிறார்கள்!எமக்கு இம்மொழி புதிது இல்லை என்றாலும், நாம் மறந்து போன அல்லது நாகரீகம் கருதி பயன்படுத்தாத சில சொற்களை, நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள்!

இஞ்சனேக்க,
அழுகப்பண்ணாட்டி,

போன்ற சொற்பிரயோகங்களைக் குறிப்பிடலாம்!

மண்வாசனை அதிகமாகவே வீசுது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு./////

ஹா ஹா தொடக்கமே அட்டகாசம்! ஆம்பிளையளுக்கு ஊர் உலக தொளபாரங்கள்தான் தெரியுமே தவிர வீட்டில் என்ன நடக்குதெண்டு ஒருபோதும் தெரிவதில்லை!

அதனால்தான் தொட்டதுக்கெல்லாம், மனைவிமாரை அழைப்பார்கள்! அதுவும் , அன்பான கணவன் - மனைவி என்றால் போச்சுது, கணவனுக்கு செல்லம் அதிகமாகிவிடும்!

அவருடைய ஆடைகளில் இருந்து, அடையாள அட்டைவரை கண்ட கண்ட இடங்களில் போட்டுவிட்டு, அவற்றை எடுத்துத் தரும்படி மனைவியைக் கெஞ்சுவார்!

மனைவியும் செல்லமாக கோபித்துக்கொண்டே , ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுப்பார்!

அன்பான மனைவிக்குப் பக்கத்தில் ஒவ்வொரு கணவனும் குழந்தையாக மாறிவிடுவான் என்ற வாழ்வியல் உண்மையினை அழகுற எடுத்து சொல்கிறது இச்சிறுகதையின் தொடக்கம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து
போனவையின்ரயோ தெரியேல்ல.////

கதையின் இரண்டாவது பந்தியில், கதையில் வரும் இரண்டாவது கதாபாத்திரமாகிய மனைவியை அழகாக அறிமுகம் செய்கிறீர்கள்!

ஒரு நல்ல குடும்பப் பெண்ணுக்கு ஞாபக சக்தி அபாரமாக இருக்கும்,! குடும்ப விஷயங்கள் அனைத்தையும் மிக அழகாக நினைவில் வைத்திருப்பார்! எப்ப என்ன சம்பவம் நடந்தது என்பதையெல்லாம் நல்ல மனைவி நன்றாக நினைவில் வைத்திருப்பார்!

கணவனுக்கோ ஞாபக மறதி! கணவன் கேப்பார்

“ என்னப்பா இறைச்சி சாப்பிட்டு ஒரு கிழமையாகுது! ஒருக்கா வேண்டிக் காய்ச்சன் “

அதுக்கு மனைவி சொல்வார்!

“ என்னப்பா முந்தநாள்தானே ரெண்டுகிலோ மரை வேண்டிக் காய்ச்சினாங்கள்! அதுக்கிடையில மறந்திட்டிங்களே “

என்று செல்லமாக கோபிப்பார்!

பின்னர் கணவன் அசடுவழிந்தவாறே “ ஓம் என “ என்பார்!

இப்படி ஒரு அன்பான, குடும்பபாங்கான மனைவியை கதையில் அறிமுகம் செய்தமை பாராட்டுக்குரியது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.
ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே./////

ஹா ஹா ஹா இதில் ஒரு வேடிக்கை இருக்கிறது! பெண்கள் எது செய்தாலும், அது அடுத்தவர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்! நகை வாங்க காசு சேர்ப்பார்கள், கணவனுக்குத் தெரியாமல் காசை ஒளித்து வைத்திருப்பார்கள், சீட்டுப் பிடிப்பார்கள்!

இதெல்லாம் ரகசியமா நடக்கும்! கணவனுக்கு இது பற்றி எதுவும் தெரியாது! அவர் ஓட்ட வாயாக இருப்பார்! சந்தியில குந்திக்கொண்டிருந்து, தனது நண்பர்களுக்கு எதையாவது உளறிக்கொண்டிருப்பார்!

இதிலும் கள்ளக்கோழி பிடிக்கும் மனைவியின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது?

அக்க்கோழி வளரும்வரை அம்மாவின் வீட்டில் கொண்டு போய் விடலாமாம்! வளர்ந்த பின்னர், கொண்டுவந்துவிடலாமாம்!

ஹா ஹா ஹா சும்மாவா சொன்னார்கள் - மனைவி ஒரு மந்திரி என்று!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...!/////

ஹா ஹா ஹா இது ஆண்களின் அவசரபுத்தியையும், தூரநோக்கற்ற சிந்தனையையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சும்மாயிருகோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்./////

ஆஹா இப்படியான பொறுப்புணர்வுள்ள குடும்பப்பெண் மனைவியாக வாய்த்தால் ஒவ்வொரு குடும்பமும், ஆலயமாக விளங்குமன்றோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே./////


ஹி ஹி ஹி அதானே பார்த்தேன்! உலகத்தில் எல்லாப் பெண்களிடமும் ஒரு இயல்பு இருக்கிறது! அதாவது இன்னொரு பெண்ணைக் கடைசிவரைக்கும் நல்லவள் என்று சொல்ல்மாட்டாள்! ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டே இருப்பார்கள்!

அது ஆரோக்கியமான போட்டியாக மாறி குடும்ப வளர்ச்சிக்கு உதவும் வரை நல்லதுதான்!

இந்த இடத்தில் ஹேமாவிடம் ஒரு ஜாலி கேள்வி! கோபிக்க மாட்டீர்கள்தானே!

பத்து ஆண்கள் ஒரு இடத்தில் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டை வராது! ஆனால் இரண்டு பெண்கள் இருந்தால், அந்த இடமே சண்டைக்களமாக மாறிவிடுமாம்! “

இப்படி ஊரில் சொல்வார்கள்தானே!

இது உண்மையா?

ஹி ஹி ஹி!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மொத்தத்தில், மகனின் வாழ்க்கையையும், ஒரு கோழியின் செயல்பாட்டையும், அழகுற இணைத்து, இவற்றுக்கு இடையில் நுணுக்கமான ஒரு தொடர்பை எடுத்துக்காட்டி, இனிமையான மொழிநடையில் சிறுகதை விருந்து படைத்த, தமிழ்மண நட்சத்திரப் பதிவர் சகோதரி ஹேமாவுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

Karthick Chidambaram said...

உண்மையில் இது ஒரு புது விதமான அனுபவம். நான் ஈழத்தமிழில் இது வரை கதைகள் படித்து இல்லை. சில இடங்களில் தடுமாறினேன்.
தமிழ் தாலாட்டுகிற மாதிரி இருந்தது. ரஜினி காந்த் சொன்னது நினைவுக்கு வந்தது - அவர்கள் (ஈழத்தவர்கள் ) திட்டினால் கூட சங்கீதம் மாதிரி இருக்கும்.

இன்னும் நிறைய உங்கள் வழக்கு மொழியில் தாருங்கள். படிக்க ஆர்வமாக உள்ளது. தமிழில் வட்டார வழக்குகளுக்கே ஒரு அகராதி போடா வேண்டும்.

Prabu said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா....
ருசிகரமான படைப்புகள்.....
பொறுமையாக வந்து படித்து சொல்கிறேன்....:-)

மதுரை சரவணன் said...

vattaara moliyile kalakkall kathai... arumai.. vaalththukkal

Angel said...

ஹா ஹா ஹா ஹா .!!!!!!!!!
இது உண்மையிலே நடக்கிற விஷயம் தானே ஹேமா .
எங்க வீட்டு சேவல் பக்கத்துக்கு வீட்டுல வளக்கிற கோழி பெண் தோழிகளை
எங்க வீட்டுக்கு முட்டை இட கூட்டிட்டு வருங்க .சிரிப்பா இருக்கும் .
நல்ல நகைச்சுவை .கதையில் ரெண்டு ஹீரோயின்சும் சிவப்பு நல்ல ஒற்றுமை .

மோகன்ஜி said...

ஹேமா! உன் நகைச்சுவையுணர்வு இந்தக் கதையில் தெரிகிறது. இலங்கைத் தமிழில் மனசு ஒரு கிறக்கம் காணும்.. வட்டார மொழியில் ஆனந்தமாய் ரசித்து எழுதியதிற்கு பாராட்டுக்கள்

நிரூபன் said...

ஏனப்பா பெயிண்ட் அடிச்சா என்ன.எங்கட புதுக்கோழியெண்டு
சொல்லலாமெல்லோ.உங்களுக்கு அறிவே இல்லையப்பா...//


ஐயோ....ஐயோ....
கோழிக்குப் பெயிண்ட் அடிக்கப் போறாங்களாம்..

ஹி....ஹி....

நிரூபன் said...

மேற்படி நகைச்சுவைக் கதையானது புரியவில்லை எனப் பலர் சொல்லுவதால்
கதையில் வரும், ஈழத்துச் சொற்களுக்கு பொருள் விளக்கம் தரலாம் என நினைக்கிறேன்...
ஹி....ஹி....

ராஜ நடராஜன் said...

கவிதை மட்டுமல்ல!வட்டார வழக்கும் இயல்பாய் எழுத்தில் வருகிறது ஹேமா!

இதென்ன கதைச் சுருக்கம்?பதிவோட அழகே சொற்பதங்கள்தான்.

எழுத்தும் சொற் பழக்கம்.

நிரூபன் said...

சபாஷ் சகோ...

அற்புதமான ஒரு நகைச்சுவைப் படைப்பினை, முழுக்க முழுக்க ஈழத்து தமிழில் எழுதியிருக்கிறீங்க...

வாழ்த்துக்கள்....

தொடர்ந்தும் காத்திரமான பல நகைச்சுவைப் பதிவுகளைத் தருவீங்க என எதிர்பார்க்கிறேன்.

நிரூபன் said...

இஞ்சாரப்பா- இங்கே அத்தான்/ இங்கே மாமா...

கவனிச்சியே: பார்தேளா..../ பார்த்தீங்களா

இஞ்சனேக்க: இங்கும் அங்குமாக/ Just Here

ஆரிண்ட- யாருடைய

தெரியுமே: உங்களுக்குப் புரியும் தானே...

ஓமப்பா - ஆமா அத்தான்....

பாக்கிறன்- பார்க்கிறேன்

வளவு: வீட்டுக் காணி/ வீட்டின் சுற்றுப் புறம்

திரியுது- வாக்கிங் போகுது....

பாப்பம்- காத்திருப்போம்

வளந்தாப்போல- பெருசாகிய பிற்பாடு

நிரூபன் said...

சட்டிக்க வைக்கவெண்டு...- சமையலுக்குத் தயார் படுத்துதல்

சும்மாயிருங்கோப்பா- கொஞ்ச நேரம் அடக்கி வாசிக்கிறியேளா...

எண்டவளெல்லே- என்று சொன்னவா.../ என்று சொன்னா.

படலை: வீட்டு வாசற் கதவு/ Entry Door

கொப்பருக்கு- அப்பாவிற்கு..

முடி போடுறியள்- தொடர்புபடுத்துதல்/
ஒன்றை ஒன்றோடு தொடர்புபடுத்திப் பேசுதல்

நிரூபன் said...

அண்டைக்கே -ஏலவே...

ஓமடி...- ஆமாடி...ஆமாங்க...

அப்பாதுரை said...

பிரமாதம்!
நீங்க * பதிவரானதாலா எதனாலோ தமிழ்மணம் ஆமை வேகத்தில் ஏறுகிறது. நிறைய பேர் உங்கள் பதிவுக்காக தம தளத்துக்குப் போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

நம்மிடையே தமிழ் வழக்கில் இத்தனை வித்தியாசமா? i had no idea! படிக்க படிக்க இனிமையா இருக்குங்க. நாலைந்து முறை படித்த பிறகு புரிந்து கொள்ள முடிந்தது. வழக்கில் எழுதியற்காக என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

அப்பாதுரை said...

இலங்கை வானொலியில் கேட்டதை வைத்து தமிழ் வழக்கை எடை போட்டது எத்தனை பிழை! ராஜேஸ்வரி ஷண்முகம், அப்துல் ஹமீது போன்றவர்கள் பேசிய வழக்கு எந்த இடத்தது?

நேசமித்ரன் said...

அழகு :)

Jerry Eshananda said...

டியர் ஹேம்ஸ்,ஒருகாலத்தில் சிலோன் ரேடியோவில் நாடகம் கேட்டு வெகுவாய் ரசித்து சிரிப்போம், அதுக்கப்புறம்,உங்க பதிவு,அந்த நாள் ஞாபகத்தை தந்தது.

கீதமஞ்சரி said...

எங்கள் ஊரிலும் வளர்ப்புக் கோழிகள் இதுபோல் காணாமற்போய் குஞ்சுகளுடன் திரும்பிவருவதைப் பார்த்திருக்கிறேன், ஹேமா... அருமையான கதை! வசனங்கள் பிரமாதம். மொத்தத்தில் நகைத்தேன், சுவைத்தேன்.

ராமலக்ஷ்மி said...

//பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ.சரி கோழி துலைஞ்சமாதிரி திரும்பி எங்களிட்டயாவது வாறானே.அதுவே போதும் சந்தோஷம்.விடு.//

நல்ல கதை. நல்ல முடிவு:)! வழக்கு மொழி அருமை. எங்கள் அம்மாவின் அப்பாவுக்கு கொழும்பில் வியாபாரம் அப்போது. பள்ளிப் பருவம் அங்கேயே என்பதால் இந்த வழக்கு அருமையாய் வரும்.

//ஒருகாலத்தில் சிலோன் ரேடியோவில் நாடகம் கேட்டு//

ஜெரி அவர்கள் சொன்னது போல இந்த அனுபவத்தையும் தந்தது ஹேமா.

முதல் நகைச்சுவை முயற்சி மிக நன்று. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

‘அம்மா’வின் பள்ளிப் பருவம்.

Post a Comment