*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, February 14, 2011

ஒரு நான் ஒரு அறிவிப்பாளன்.

முக விழிப்பிற்கே முழித்து விழித்து நிற்கிறேன்.நீ என் அன்பா,காதலனா இல்லை என் கணவனா.எப்படித்தொடங்க நான்.சரி அது அப்படியே இருக்கட்டும்.என் உயிர் நீ.இப்போதைக்கு இது போதும்.வாழ்ந்த காலங்கள்,வாழப்போகும் காலங்கள் அனைத்துமே உன்னோடுதானே.

திட்டமிட்ட எழுத்துக்கள் இங்கு எதுவுமில்லை.கணணி பழுதடைந்துவிட்டது.நேற்றுப் பின்னேரம்தான் புதிதாய் ஒன்று வீடு நுழைந்தது.முழுமையான கணணி அறிவு என்னிடமில்லை.ஓரளவு தொடர்பு நூல்களை இணைத்து மின்சாரம் கொடுத்திருக்கிறேன்.
இதைச் செப்பனிட நீ மட்டுமே சொல்லித் தந்துகொண்டிருந்தாய். இப்போ சொல்லித்தர யாருமில்லாமல் கணணி முழுமைடையாமல்....!

இனி நீ இல்லை என்பதை பொய்யாக்கிக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு கணமும்.புதிதாய் ஒரு கணணிபோல இதயத்தை மாற்றமுடியாமல் புதுக் கணணித் திரையிலும் முழுதாக உன் முகமே தெரிய நான் செத்துக்கொண்டிருக்கும் செய்தியைக் கிறுக்கிகொண்டிருக்கிறேன்.

காதலர் தினம்.வருவேன் உன் கையோடு இருப்பேன்.உன் இதழின் சுவையோடு பசி மறந்திருப்பேன்.நீ எனக்கொன்றும் சமையல் செய்யக்கூட வேண்டாம்.நீயே சமையலாயிரு என்று சிரித்த ஞாபகம்.ஆனால் நீயுமில்லை...சமையலுமில்லாப் பொழுதில்தான் காத்திருக்கிறேன் உன் குரலின் சூன்யத்தோடு.பசிக்கிறது மனம்.இன்னும் நேரமிருக்கிறது வந்துவிடு.....!

திட்டமிடாத சமயத்திலேயே நான் விரும்பத்தொடங்கியிருக்கிறேன் இந்தக் கடிதம்போல உன்னை.ஆனாலும் என்னை முழுதாகச் சொல்லியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். என் சோகங்களைத் தின்று செரித்தவன் நீ.அப்பாவாய்,
அம்மாவாய்,சிநேகிதனாய்,வில்லனாய்,விமர்சகனாய்க்கூட இருந்திருக்கிறாய்.இப்போ.....!

உன்னால் அனுப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துக்குள் எம் திருமணத்தன்று எனக்குப் பிடித்த ஒற்றை ரோஜா இதழைச் சிறைப்பட வைத்தாய்.இன்னும் என் புத்தகங்கள் நடுவில் உயிரோடு.உன் ஒற்றை எழுத்துக்களைக்கூட நான் வீணாக்குவதில்ல.....உன் குரலை ஒலிப்பேழைக்குள் சேமித்ததைப்போலவே.ஆண்மை நிரம்பிய உன் குரலுக்குள் ஏதோ இறுகிய இறுமாப்பு எனக்கு.என்னவன் இவன்தான் என்கிற அறிவிப்பு.வானொலியில் முதல்நாள் உன் குரல் கேட்டபோதே விளங்கி வெட்கப்பட்டேன்.

இப்போ நான் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.அலைந்து அலைந்து நிலையில்லாத சிட்டின் இறகாய் அங்கு கொஞ்சம்...இங்கு கொஞ்சமாய் உன் நினைவுகளூடே.மனமும் அலைந்துகொண்டிருக்கிறதோ.
இப்போதைய என் எண்ணங்களை பதிந்துகொள்ள மட்டுமாய் இம்மடல்....!

என் வாழ்வமைப்பு சோகச் சிற்பமாய் என்னை இறுக்கியிருந்தாலும் உன் இறந்தகால வருகைதான் கண்முன் என்னை கொஞ்சம் என்னை உடைத்து உருக்கியிருந்தது.இன்று அதே அன்பு என்னை உலகத்து அத்தனை அன்பானவர்களையும் வெறுத்து விலகிக் கொன்று குவிக்கவும் வைக்கிறது.இதற்கெல்லாம் நீ பதில் தரப்போவதுமில்லை.எனக்கும் தேவையில்லை.தேடிக் களைத்து பின் தொலைத்த நித்திரைக்காலம்போல இனியும் இந்த இரவுகளைச் சலித்துக்கொள்ளப்போவதுமில்லை.

ஏப்ரல் முதலாம் திகதி எம் திருமணமத் தினத்தை நீ நினைக்காமல் போனாலும்,காதலர் தினமான இன்று என்னை நீ நிச்சயம் நினைத்துக்கொள்வாய்.இன்று பார்க்க நேரமில்லாவிட்டாலும்,ஒற்றை நடசத்திரத்தை இரவு முத்தமிடும் சமயத்தில் வெட்கத்தால் பளிச்சிடும் வெளிச்சத்தில் பார்த்துக்கொள்வாய்.

உனக்கான எத்தனை கவிதைகள்.ஆனால் உனக்குப் புரியாமலே இருந்திருக்கிறது.நீ முத்தமிட்ட முதல்நாள் என் உதட்டில் இன்னும் ஈரமாய்த்தான்.ஒரு அறிவிப்பாளனாய் செய்திகள் சேமிக்கும் ஒரு பத்திரிகையாளனாய் என் இந்தக் கடிதத்தையும் சேமித்துக்கொள்வாய்.அறிவிப்புப் பாணியில் வாசித்தால் இதில் உயிர் இருக்காது.இது செய்தியல்ல என் உணர்வு.உன் குரலில் பாவங்கள் வெளிப்படுவது குறைவு என்பது உனக்கே தெரிந்த குறை.இதனாலே கவிதைகளை நீ வாசிப்பதில்லை என்பதும் செய்தி.அன்பை அறிவிக்கும் அறிவிப்பாளனாகவே இருந்திருக்கிறாய்.

குழந்தையாய் உன் சின்னவிரலோடு பயணித்த காலங்கள் தடம் அழுத்தமாய்."எனக்காக என்று என்ன செய்திருக்கிறாய் நீ" என்று நேரிலும் கடிதத்திலும் தொலைபேசியிலும் சண்டை போட்ட நேரங்களில் எல்லாம் என் உள்மனதிற்குள் உன்னை உன் அன்பை நேசித்தபடியே நெகிழ்ந்திருக்கிறேன்.உன்னைத் தவிர வேறு யாரல் என்னை இத்தனை தூரம் வழிநடத்தி என உயிரை உனக்குள் பாதுகாக்கமுடியும்.என் கவிதைகளையும் கூடத்தான்.

ஞாபகங்கள் நிறையவே தந்திருக்கிறாய்.நானும்தான் என்பாய்.
பத்திரமாக்கிக்கொள்வாயா இனியும் தெரியவில்லை.கொஞ்சம் பயந்தாங்கோழி நீ.நாம் எத்தனை வருடங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலே அன்பைக் கொட்டி இறைத்துக் கொண்டிருந்தோம்....இருக்கிறோம்.அந்த இரவுகளும் ஏன் பகல்களும்கூட கூச்சப்பட எத்தனை கதைகளும் சேட்டையுமாய் என்னைத் திக்குமுக்காட வைத்திருப்பாய்.ஒரு பிறந்தநாளோ ஏன் தீபாவளி பொங்கலைக்கூட ஒரு கிழமை,இரண்டு கிழமை பிறகு ஒரு மாதம்,இரண்டு மாதம் என்றுகூடக் கொண்டாடிக்கொள்வாய்.அந்த நேரங்களில் என்னையும் உன் அன்புத் தலையணைக்குள் வைத்தடைத்து திணித்து ஒரு உருளையாய் உருட்டிப்போவதுதான் உன் கெட்டித்தனம்.மூச்சுத் திணறித் திட்டித் தீர்த்திருக்கிறேன்....!

இன்னும்....இன்னும் நிறைய.சலிப்பேயில்லாத உன் சவரம் செய்யப்படாத அழகான ஒற்றை நாடிக்குள் அடங்கும் அந்தச் சின்ன முகம்.சின்னக் கண்.புசுபுசுவென்று ஒழுங்காய் வராத உன் முடி.இதில் ஒரு வேடிக்கை ஒற்றை பியர்க்குவளை இன்னும் கூட்டிவைக்கும் உன் அன்பை.பொழிந்து கொட்டுவாய் உளறும் உன் நாக்குக்கூட உன்னை நக்கலடித்திருக்கும். பெயர்போன ஒரு அறிவிப்பாளன் இப்படி உளறித் தள்ளுகிறானே என்று.

பாடலும் வரும் சிலசமயம்.ரசிகையாக நான் எத்தனை ராத்திரிகள் சாமக்கோழியாய். இடைக்காலப் பாடல்களையும் எங்கள் போர்க்காலப் பாடல்களையுமே விரும்பிக் கேட்பாய். இதில் இம்சை என்னவென்றால் தொலைபேசியில் அந்தப் பாடல்களை நான் கேட்டு அபிப்பிராயம் வேறு சொல்லவேண்டும்.இல்லையென்றால் நீ சரியாகக் கேட்கவில்லையென்று திரும்பவும் கேட்கவைப்பாய்.திட்டித் திட்டி பாட்டுக் கேட்கும் முதல் ஆள் நான் என்று பலத்த சிரிப்போடு நீ....!

தூங்கும் அழகை ரசிப்பதா இல்லை திட்டுவதா என்று தடுமாற்றம் எனக்குள்.குளிரோ வெக்கையோ வளைந்து வயிற்றில் சூடு சேமித்து எத்தனை மணி வரைக்கும் என்றாலும் நித்திரை கொள்வதில் நீயேதான்.உன் நித்திரைக்காக நானும் படுத்திருந்த நாட்களும்.அப்படியே பகலை முத்தப்போர்வையாக்கி என்னையே களவாடிய தினங்களும்....படுக்கை வலிக்க போர்வை உன்னைத் தேட பதிலற்ற இரவுகளைத் துரத்தும் போராளியாய் நான் இப்போ.

ஒரு சிகரெட்டை முழுதாக புகைக்கும் பழக்கமில்லாமல் அடிக்கொருதரமாய் புகைத்துக்கொள்வாய்.அதற்கும் திட்டும் சண்டையும்."ஐயோ....வாய் நாறுது கிட்ட வரவேண்டாம்" என்று வெறுத்துத் தள்ளிக்கூட வைத்திருக்கிறேன். பாவமாய் முகம் வைத்து நெருங்குவாய்.நானும் திருந்தவில்லை...நீயும் திருந்தவில்லை இந்தப் பழக்கத்தில்.

நேசம் மட்டுமே சொல்லித்தந்த உன் உதடுகளில் கொஞ்ச நாட்களாக அலட்சிய வார்த்தைகள் அலட்சியமாக வந்து விழுகின்றன.
வெறுக்கிறாயோ.நிறையவே பொய் சொல்லவும் பழகியிருக்கிறாய்.இந்தச் சமயத்தில் நீ சொன்னதொன்று வழுக்கி விழுகிறது மனதிற்குள்."யாரிடம் பொய் சொன்னாலும் நான் உன்னிடம் என்றுமே பொய் சொன்னதில்லை.சொல்லப்போவதுமில்லை"என்று அதன்படியும்தான் என்னோடு வாழ்ந்திருக்கிறாய்.வாழ்கிறாய்....!

என் சோகம் தனிமை என்கிற விரக்தித் தோட்டத்துள்ளுள் நுழைந்த நீ என் தோள் தொட்டுத் திருப்பி உன் நேசக் கரத்துள் அணைத்துக் கூட்டி இதுவரை வந்துவிட்டாய்.கண்ணில் ஒன்று, மூக்கில் ஒன்று,கன்னத்தில் இரண்டு,உச்சத்தலையில் ஒன்று,உதடு கழுத்து என இறங்கி வரும் உன் முத்தங்களாலேயே என் சோகம் குறைத்த நீ இன்னும் இன்னும் அதே அன்பு மாறாமல்தான் எனக்குள்.

ப்ரியங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது உன் உலகம்.என்னை அதற்குள் அனுமதித்து உலவவிட்டிருக்கிறாய் இதுநாள்வரை.அதற்கே நான் நன்றி சொல்கிறேன்.அம்மாவிடம் கிடைக்காத அன்பைக்கூட தந்து தாயுமானவனாய் தலைதடவி,என்னடி என்று அதட்டியும் அன்புமாய் அனுசரித்திருக்கிறாய்.பிரமித்த பாதை வழி என் விரல் பிடித்து கூட்டிப்போகுபோதெல்லாம் அன்பின் கடவுளோடு நடப்பதாய் மறுப்புச் சொல்லாமலே நடந்திருக்கிறேன்.பள்ளமும் குழிகளும் அறிந்து வைத்திருக்கும் அதிசயக் கடவுளாய் இருக்கிறாய் எப்போதும் எனக்குள் நீ.

இனி நீ என் வாழ்வில் இல்லையென்றாலும் தூரத்துக் கடவுளாய் என்னைக் காத்துக்கொள்வாய் என்கிற நம்பிக்கை இன்னும்.என்னால் முடியவில்லை. வந்துவிடு.பிரிவையும் இழப்புக்களையும் பழகிய இதயத்தோடு பழகியதால்....தெரிந்துதான் விலகினாயோ.கிராதகா.....
கவலைப்படாதே.
நான் செத்துக்கொண்டேயிருக்கிறேன்.ஆனாலும் உயிர் தொலைத்து அலையும் உன் பிசாசாய் நான்.உனக்கான என் கவிதைகளையும் கவனித்துக்கொள்.என்.....உன் சுவாச எண்ணங்களாய் அவைகள்.

அன்பு அப்படியேதான் மாறாமல்.முத்தங்களின் ஈரத்துக்காகவே காத்திருக்கும் தகிக்கும் உதடுகளும் அப்படியேதான்.நீ மட்டும்தான் இன்று தவறவிடப்பட்ட பொருளாய். கண்டுகொள்வேன் ஆனால் என்னது என்று சொல்லிக்கொள்ளமுடியாத ஒரு இடமாய்க்கூட இருக்கலாம் அது!!!

குற்றம் சொல்ல முடியாத
உன் அன்பை
சுவிஸின் உயர்ந்த யுங்(F)ரௌ மலைகளில்
செதுக்கி வைத்திருக்கிறேன்.
காதுக்குள் பாடிய பாடல்களை
பனிமுடிய
முளைக்கும் முதல் புல்லின் துளிரிலும்
அப்பிள் மரங்களும் அடியிலும்
பியர்ஸ் மரங்களின் முதல் பிஞ்சிலும்
உன் பெயர் செதுக்கிய
காதலர்தின ஞாபகங்கள்.

கறுப்புக்கடலின் முகத்திலும்
ஆயிரமாயிரம் கேள்விகள்.
கோடிட்ட இடமும் நிரம்பாது
கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது.
அந்த இடங்களில்
வெறும் புன்னகைப் பூக்களை மட்டுமே
நட்டு வைக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

எவரும் விரும்பாத பூக்களையே நடுவேன்
பறிக்கும் ஆசை வராத பூக்கள்
எனக்குமானது மட்டுமாய்.
பனியில் கருகிய பூக்களைக்கூட
பொத்திப் பாதுகாத்து
பனியுடுத்திய
வெள்ளைமரங்களுக்கு நடுவில்
நானும் வெள்ளைச்சேலை
உடுத்தத் தொடங்குவேன்
இனி உன் அன்போடு!!!

ஹேமா(சுவிஸ்)

60 comments:

ஹேமா said...

கணணி பழுதடைந்து நேற்றுத்தான் புதிதாய் ஒன்றை வாங்கித் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.இன்னும் முழுமையாக்க முடியவில்லை.
இன்னும் 2 - 3 நாட்களாகுமோ தெரியவில்லை.இதனாலேயே உங்கள் பக்கங்களுக்கு வரமுடியவில்லை.
வந்துவிடுவேன் !

காதலின் வெப்பச்சூட்டில் புதைந்துகிடக்கும் என் அன்பான காதல் உறவுகளுக்கு,காதலுடன் என் அன்பான வாழ்த்துகள் !

அன்போடு ஹேமா.

Unknown said...

காதலர் தின வாழ்த்துக்கள் ஹேமா..

Ramesh said...

கடைசிபந்தியும் அதற்கு முதல்பந்தியும் போதும் கவிதையில்.
மீண்டு(ம்) வருக ஹேமா..
காதலர்களுக்கு காதலர்தின வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

உங்கள் எழுத்து மனதை ஏதோ செய்கிறது..அருமை..அருமை. கடைசி கவிதையும் அருமை..

காதலர் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

கடிதத்தின் நீளத்தில் காதலின் ஆழம் கண்டேன் ஹேமா.. நெகிழ்ச்சியாகவும் நெஞ்சம் நிறைந்தும் இருக்கு உங்கள் காதல்..

arasan said...

நெகிழ்வா இருக்குங்க ....
வாழ்த்துக்கள் ....

logu.. said...

Marakka mudiyatha pathivu...

vazhthugal.

ஆதவா said...

இந்த கடிதத்தில் ஏங்கி வழியும் காதலும் சோகமும் உண்மையானதைப் போன்றே இருக்கிறது. சில்சமயம் நான் சிலவருடங்களுக்குப் பின் சென்று வந்த உணர்வை ஏற்படுத்திவிட்டது சகோ.

ஆனால் கடிதத்தின் கனத்தை விட கவிதையின் கனம் மிக அதிகமாகத் தெரிகிறது. குறிப்பாக

குற்றம் சொல்ல முடியாத
உன் அன்பை
சுவிஸின் உயர்ந்த யுங்(F)ரௌ மலைகளில்
செதுக்கி வைத்திருக்கிறேன்.
காதுக்குள் பாடிய பாடல்களை
பனிமுடிய
முளைக்கும் முதல் புல்லின் துளிரிலும்
அப்பிள் மரங்களும் அடியிலும்
பியர்ஸ் மரங்களின் முதல் பிஞ்சிலும்
உன் பெயர் செதுக்கிய
காதலர்தின ஞாபகங்கள்.


இந்த வரிகளைத் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டேயிருந்தேன். ஒருசின்ன மாற்றம் செய்திருக்கலாமெனத் தோணுகிறது.. ”பனிமூடிய” சற்று இடறலாகத் தோன்றுகிறது.

பனியுடுத்திய
வெள்ளைமரங்களுக்கு நடுவில்
நானும் வெள்ளைச்சேலை
உடுத்தத் தொடங்குவேன்


அபாரம்!!!

Riyas said...

ம்ம்ம்ம் காதலர் தின ஸ்பெஷலா ஹேமா அக்கா,,, வாழ்த்துக்கள்.

கலா said...

ஹேமா, அன்புக்குக் கிடைத்த பரிசுதான்
இந்தச் சோகச் சுமையா’?

அவர் அன்பிக்கு அப்பால் அதனால்தான்
அம்பு விட்டுஆ{ழ}ள ரணமாக்கி
காயம் புரையோடக்
காணாமல் போய்விட்டார்
இருந்தாலும்....
அவர்.
மனமென்ற சாட்சி “உன்காயத்தை”
நினைக்க மறக்காது


அன்பென்று,அன்பர்தினத்தன்று
அள்ளித் தெளித்தாய்
எங்களில்...
பன்னீரை_அது
மணக்கவில்லை
மனக்கவலைதான்!

ராஜவம்சம் said...

உள்ளேன்.

Unknown said...

காதலர் தின வாழ்த்துக்கள்!

தமிழ் உதயம் said...

கடிதமும், கவிதையும் காதலை அணு அணுவாக சொன்னது.

அம்பிகா said...

காதலர் தின வாழ்த்துக்கள் ஹேமா. ஆழ்ந்த காதலையும் சோகத்தையும் சொல்கிறது கவிதை. முடிக்கையில் பாரமாக உண்ர்கின்றென்

சீமான்கனி said...

நினைவுகள்....கொஞ்சம் நெருக்கமாகவும் உருக்கமாகவும்...கவிதையோடு செய்துகொண்ட ஒப்பந்தமும் நெகிழ்வு...

நசரேயன் said...

//கணணி பழுதடைந்து நேற்றுத்தான் புதிதாய் ஒன்றை வாங்கித் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.இன்னும்
முழுமையாக்க முடியவில்லை.//

நீங்க கவுஜ எழுதுறது கணணிக்கே பிடிக்கலையோ ?

நசரேயன் said...

//எப்படித்தொடங்க நான்//

குத்து வசனத்தோட ஆரம்பிங்க

//ஓரளவு தொடர்பு நூல்களை இணைத்து மின்சாரம் கொடுத்திருக்கிறேன்.//

அதுவே போதுமே .. இப்ப இருக்கிற கணனிக்கு

//செப்பனிட நீ மட்டுமே சொல்லித் தந்துகொண்டிருந்தாய். இப்போ சொல்லித்தர யாருமில்லமல் கணணி முழுமைடையாமல்....!//

சம்பளம் பத்தாம பொய் இருக்கும் ..

// புதுக் கணணித் திரையிலும் முழுதாக உன் முகமே தெரிய நான் செத்துக்கொண்டிருக்கும் செய்தியைக் கிறுக்கிகொண்டிருக்கிறேன்//

திரையிலே ரெம்ப கிறுக்காதீங்க.. அப்புறம் இதும் உடைந்து போகும்

//பசிக்கிறது மனம்.இன்னும் நேரமிருக்கிறது வந்துவிடு.....!//

ஆடோவிலேயா இல்ல சுமொவிலேயா

Admin said...

காதலர்தின வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//என் சோகங்களைத் தின்று செரித்தவன் நீ//

வண்டி வண்டியா சோகம் இருக்கிறவங்க உங்க ஆள்கிட்ட வந்தா எல்லாத்தையையும் சாப்பிடுவாரா ?

//அப்பாவாய்,அம்மாவாய்,சிநேகிதனாய், வில்லனாய்,விமர்சகனாய்க்கூட இருந்திருக்கிறாய்.இப்போ.....!//

உங்க கவுஜைய படிச்சி இருப்பாரு

//.உன் ஒற்றை எழுத்துக்களைக்கூட நான் வீணாக்குவதில்ல.....உன் குரலை ஒலிப்பேழைக்குள் சேமித்ததைப்போலவே//

வேற வேலையே இல்லையா

//எம் திருமணத்தன்று எனக்குப் பிடித்த ஒற்றை ரோஜா இதழைச் சிறைப்பட வைத்தாய்//

அதனாலே நீங்க இன்று ஆயுள் சிறை கைதியாக ?

//ஆண்மை நிரம்பிய உன் குரலுக்குள் ஏதோ இறுகிய இறுமாப்பு எனக்கு.//

குரலை கடையிலே ஏத்துங்க கேட்டுட்டிட்டு சொல்லுறேன் ..

//வானொலியில் முதல்நாள் உன் குரல் கேட்டபோதே விளங்கி வெட்கப்பட்டேன்.//

நேரிலே பேசினா மயங்கி விழுந்துவீங்களோ ?

நசரேயன் said...

//இப்போ நான் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறேன்//

தெரிஞ்சா சரிதான் ..

//அலைந்து அலைந்து நிலையில்லாத சிட்டின் இறகாய் அங்கு கொஞ்சம்...இங்கு கொஞ்சமாய் உன் நினைவுகளூடே//

பறக்கத்தெறியுமா சொல்லவே இல்ல

//.மனமும் அலைந்துகொண்டிருக்கிறதோ.
இப்போதைய என் எண்ணங்களை பதிந்துகொள்ள மட்டுமாய் இம்மடல்....//

இதே வேலையாத்தான் இருக்கீங்க போல

//என் வாழ்வமைப்பு சோகச் சிற்பமாய் என்னை இறுக்கியிருந்தாலும் உன் இறந்தகால வருகைதான் கண்முன் என்னை கொஞ்சம் என்னை உடைத்து உருக்கியிருந்தது//

ஒ.. அதனாலே தான் நீங்க எங்க கழுத்திலே கயிறு போட்டு இருக்குறீங்க

//இன்று அதே அன்பு என்னை உலகத்து அத்தனை அன்பானவர்களையும் வெறுத்து விலகிக் கொன்று குவிக்கவும் வைக்கிறது//

எம்புட்டுபேரு?

நசரேயன் said...

//இதற்கெல்லாம் நீ பதில் தரப்போவதுமில்லை.எனக்கும் தேவையில்லை//

இப்படி எல்லாம் எழுதினா நீங்க இருக்கிற பக்கமே தலை வச்சு படுக்கமாட்டாங்க

//தேடிக் களைத்து பின் தொலைத்த நித்திரைக்காலம்போல இனியும் இந்த இரவுகளைச் சலித்துக்கொள்ளப்போவதுமில்லை.//

சரி .. சொன்னமாதிரி செய்யணும்

//ஏப்ரல் முதலாம் திகதி எம் திருமணமத் தினத்தை நீ நினைக்காமல் போனாலும்//

எம் னா?

//காதலர் தினமான இன்று என்னை நீ நிச்சயம் நினைத்துக்கொள்வாய்//

அண்ணாச்சி ஒரு வாழ்த்து ஆட்டைய அனுப்பி விட்டு இருந்தா.. நாங்க கொஞ்சம் நிம்மதியா இருந்து இருப்போம்

//ஒற்றை நடசத்திரத்தை இரவு முத்தமிடும் சமயத்தில் வெட்கத்தால் பளிச்சிடும் வெளிச்சத்தில் பார்த்துக்கொள்வாய்//

ஏன் பகல்ல பாக்க முடியாதோ ?

நசரேயன் said...

//உனக்கான எத்தனை கவிதைகள்.//

என்னசெய்ய ஒண்ணுமே நல்லா இல்லையாம்

//ஆனால் உனக்குப் புரியாமலே இருந்திருக்கிறது//

நீங்க லபெல்ல கவிதைன்னு போட்டீங்களா

//ஒரு அறிவிப்பாளனாய் செய்திகள் சேமிக்கும் ஒரு பத்திரிகையாளனாய் என் இந்தக் கடிதத்தையும் சேமித்துக்கொள்வாய்//

அவரு சேமிக்காரோ இல்லையோ கூகிள் ஆண்டவர் சேமித்து வைத்து இருக்கிறார்

//அறிவிப்புப் பாணியில் வாசித்தால் இதில் உயிர் இருக்காது//

எந்த பாணியிலே வாசித்தாலும் இதில் உயிர் இருக்காது

//இது செய்தியல்ல என் உணர்வு//

படிக்கிற நாங்க வாழ்த்து சொல்லவா இல்ல வருத்தம் தெரிவிக்கவா ?

//உன் குரலில் பாவங்கள் வெளிப்படுவது குறைவு என்பது உனக்கே தெரிந்த குறை//

குறை இல்லாம யாரு இருக்கா ?

நசரேயன் said...

//இதனாலே கவிதைகளை நீ வாசிப்பதில்லை என்பதும் செய்தி//

தப்பிச்சாரு

//"எனக்காக என்று என்ன செய்திருக்கிறாய் நீ" //

ஒரு கேள்விக்கு ஒன்பதாயிரம் கவிதை எழுதி இருக்கேன்னு சொல்லவேண்டியதானே

//உன்னைத் தவிர வேறு யாரல் என்னை இத்தனை தூரம் வழிநடத்தி என உயிரை உனக்குள் பாதுகாக்கமுடியும்.//

௬டு விட்டு ௬டு பாயற வித்தை எல்லாம் தெரியுமா ?

//நானும்தான் என்பாய்.பத்திரமாக்கிக்கொள்வாயா இனியும் தெரியவில்லை//

ஏன் பேங்க் ல இடம் இல்லையா ?

//கொஞ்சம் பயந்தாங்கோழி நீ.நாம் எத்தனை வருடங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலே அன்பைக் கொட்டி இறைத்துக் கொண்டிருந்தோம்..//

அளவுக்கு அதிகமா கொட்டிட்டீங்களோ ?

//நேரங்களில் என்னையும் உன் அன்புத் தலையணைக்குள் வைத்தடைத்து திணித்து ஒரு உருளையாய் உருட்டிப்போவதுதான் உன் கெட்டித்தனம்.மூச்சுத் திணறித் திட்டித் தீர்த்திருக்கிறேன்....//

no comments

நசரேயன் said...

//இன்னும்....இன்னும் நிறைய சலிப்பேயில்லாத உன் சவரம் செய்யப்படாத அழகான ஒற்றை நாடிக்குள் அடங்கும் அந்தச் சின்ன முகம்.சின்னக் கண்//

சின்ன மூக்கு .. சின்ன வாய் .. சின்ன காது

//இதில் ஒரு வேடிக்கை ஒற்றை பியர்க்குவளை இன்னும் கூட்டிவைக்கும் உன் அன்பை//

தண்ணியப் போட்டா அன்பு அப்படித்தான் வரும் .. இல்லனா போட்ட சரக்குக்கு மதிப்பு இல்லாம போய்டும் .. என்ன ப்ரண்ட் பீர் ?


//பொழிந்து கொட்டுவாய் உளறும் உன் நாக்குக்கூட உன்னை நக்கலடித்திருக்கும்.பெயர்போன ஒரு அறிவிப்பாளன் இப்படி உளறித் தள்ளுகிறானே என்று//

சரக்கு அதிகம் ஆகி இருக்கும் ..

//பாடலும் வரும் சிலசமயம்//


* நாட்டு சரக்கு நச்சுன்னு தான் இருக்கு
* வெத்தலைய போட்டேன்டி
* தண்ணி தொட்டி தேடி வந்த

ஏதாவது ஒண்ணு?

நசரேயன் said...

//தூங்கும் அழகை ரசிப்பதா இல்லை திட்டுவதா என்று தடுமாற்றம் எனக்குள்.குளிரோ வெக்கையோ வளைந்து வயிற்றில் சூடு சேமித்து எத்தனை மணி வரைக்கும் என்றாலும் நித்திரை கொள்வதில் நீயேதா//

அதிகமா குடிச்சா அப்படித்தான் ..

//ஒரு சிகரெட்டை முழுதாக புகைக்கும் பழக்கமில்லாமல் அடிக்கொருதரமாய் புகைத்துக்கொள்வாய்.அதற்கும் திட்டும் சண்டையும்."ஐயோ....வாய் நாறுது கிட்ட வரவேண்டாம்" என்று வெறுத்துத் தள்ளிக்கூட வைத்திருக்கிறேன்//

சிகரெட்டை குடிச்சா வாய் நாறும் .. தண்ணி அடிச்சா வாய் மணக்குமோ .. அப்படி ஒரு சரக்கு இருந்தா சொல்லுங்க .. பொது அறிவு கேள்வி

காஜா பீடி நல்லா மணமா இருக்கும் - பொது அறிவு பதில்

நிரூபன் said...

வணக்கம் சகோதரி,வாவ்.. என்ன ஒரு அற்புதமான உரை நடை. தமிழ் மொழி உங்கள் உரை நடையில் தவழ்ந்து செல்கிறது. கடிதம் உரியவருக்குக் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நிரூபன் said...

உனக்கான எத்தனை கவிதைகள்.ஆனால் உனக்குப் புரியாமலே இருந்திருக்கிறது.நீ முத்தமிட்ட முதல்நாள் என் உதட்டில் இன்னும் ஈரமாய்த்தான்.ஒரு அறிவிப்பாளனாய் செய்திகள் சேமிக்கும் ஒரு பத்திரிகையாளனாய் என் இந்தக் கடிதத்தையும் சேமித்துக்கொள்வாய்//

கவிதை காதலின் மெல்லிய உணர்வுகளை சாமரம் கொண்டு காற்று வீசி, மயிலிறகால் தடவி மனதிற்கு இதம் பரப்பும் வகையில் அமைந்திருக்கிறது. கற்பனை ஓவியமாய் செதுக்கப்பட்ட சிற்பத்திற்குள் நிஜங்களின் பிரதிபலிப்புக்கள் வார்த்தைகளின் விம்பங்களாய் வந்து விழுந்திருக்கின்றன. உயிர்க் காதலின், உண்மை அன்பின் ஒவ்வோர் வரிகளும் உள் மனதின் எண்ணவோட்டத்தை உரைத்து நிற்கின்றன. உங்கள் கவிதைகளில் இல்லாத ஒரு புது உணர்வை இந்த உரை நடை இயம்பி நிற்கிறது.

இனி உங்கள் படைப்புக்களில் கொஞ்சம் வேறுபாட்டிற்காக உரை நடையும் கவிதையும் கலந்த படைப்புக்கள் வந்தால் அதுவே வாசகர்களிற்கு விருந்தாக அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை.

நிரூபன் said...

இனி நீ என் வாழ்வில் இல்லையென்றாலும் தூரத்துக் கடவுளாய் என்னைக் காத்துக்கொள்வாய் என்கிற நம்பிக்கை இன்னும்.என்னால் முடியவில்லை. வந்துவிடு.பிரிவையும் இழப்புக்களையும் பழகிய இதயத்தோடு பழகியதால்....தெரிந்துதான் விலகினாயோ.
கிராதகா...கவலைப்படாதே.நான் செத்துக்கொண்டேயிருக்கிறேன்.
ஆனாலும் உயிர் போகாத அலையும் உன் பிசாசாய் நான்.உனக்கான என் கவிதைகளையும் கவனித்துக்கொள்.என் உன் சுவாச எண்ணங்களாய் அவைகள்//


ஔவையார் வரிகளில் மீட்டினால் பிரிவு என்பது மிக மிகக் கொடுமையான விடயம். ஒளவையாரின் கூற்றினடிப்படையில் பார்த்தால் அதுவும் உற்றவரை, உயிருக்கு உயிரானவரைப் பிரிந்திருப்பது மிக மிக கொடிய விடயம். அவர் என்று தான் இப் பிரிவின் தாக்கத்தை உணர்ந்து வருவாரோ! உங்கள் உள்ளத்தில் சந்தோசக் கவிதை பூக்க வாய்ப்புத்
தருவாரோ!

ஒரு அறிவிப்பாளனாய் கவிதை, உங்கள் உள்ளம் கவர் கள்வனிற்கு உங்கள் உள் மனதின் சேதிகளை அறிவிப்பாளனாய்ச் சொல்லி நிற்கிறது.

‘அனலிடைப் பட்ட மெழுகெனத் துடிக்கும்
ஆருயிர் ஜீவனை அறிந்திடாதிருக்கும்- உங்கள்
மனதினைக் கவர்ந்த கள்வன் இதை
உணர்வாரோ!

சத்ரியன் said...

//ஒரு நான்; ஒரு அறிவிப்பாளன்”//

ஹேமா,

“ஒரு நான் “ என்றால், இன்னும் எத்தனை நீ இருக்கிறாய்?

கவி அழகன் said...

காதலர் தின வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

//எவரும் விரும்பாத பூக்களையே நடுவேன்
பறிக்கும் ஆசை வராத பூக்கள்
எனக்குமானது மட்டுமாய்.//

சுயநலக்காரி.

பெண்களின் உண்மை உணர்த்தும் வரிகள்.

காதல் கடிதமும், கவிதையும் அருமையா இருக்கு.

அந்த “ தலைவன்” எங்கிருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு தலைமறைவாகவே இருக்கவும்.

தலைவா உன் கவிதாயினியின் ஏக்கமெல்லாம் எழுத்துக்களாய் வழிந்து வழிந்து வற்றிப்போகட்டும்.

எழுத்துக்கள் வழியவழிய நாங்கள் படித்து மகிழ்கிறோம்.

ஸ்ரீராம். said...

வசனகவிதை நீளமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நினைவிலும் அன்பிலும் காதலிலும் தோய்த்து எழுதப்பட்ட வரிகள்.

ஜோதிஜி said...

ஹேமா தலைப்பே வித்யாசமாய் இருக்க நீங்க ஸ்விஸ் ல் ஏதோ புதிய பணியில் சேர்ந்து இருப்பீங்கன்னு பார்த்தால் ஒரு காவியக்கதை போல எழுதியிருக்கீங்க. படித்தேன் என்று எழுதிவிட்டு நகரலாம்ன்னு உள்ளே வந்தா நம்ம நசரேயன் போட்டுத் தாக்க சிரித்துக் கொண்டே சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.

உங்க கொல வெறி என் கணணில் தெரிகின்றது. நசா நீவீர் வாழ்க்.

ஆனந்தி.. said...

போங்க ஹேமா...மனசு என்னவோ போலே பண்ணுது இந்த பதிவை படிச்சிட்டு...என்ன ரசனையான காதல்..அதுவும் சிகரட் பற்றி நீங்க எழுதிய வரியில்...//நானும் திருந்தவில்லை.நீயும் திருந்தவில்லை இந்தப் பழக்கத்தில்.// அதீத காதலை உணர்ந்தேன்...நெக்குருகி..லயிச்சு எழுதிய நினைவுகள் எல்லாமே ருசித்தது..ஆனால் அருகில் அவர் இல்லை ங்கிற உங்கள் வருத்தம் எனக்கும் சோர்வை இருந்தது..அந்த கடைசி கவிதை வரிகள் ரொம்ப நெகிழ்ச்சி ஹேம்ஸ்..

sathishsangkavi.blogspot.com said...

காதலர் தின வாழ்த்துக்கள் ஹேமா..

Anonymous said...

காதலர் தின வாழ்த்துக்கள் ஹேமா..

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை... கவிதை அருமை...

சந்தான சங்கர் said...

வார்த்தைகள் எல்லாம்
வாழ்க்கை ஆகி
விரிந்து வினவி சொல்லும்
உங்கள் பாணியில்
சோக இழை ஊடுருவி
மனதை தைத்து விட்டது தோழி..

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள் ஹேமா..!

Anonymous said...

Really very nice lines Hema:)

சாந்தி மாரியப்பன் said...

அணு அணுவாக ரசித்தேன் ஹேமா..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

:)

http://thavaru.blogspot.com/ said...

திகட்டுகிறது ஹேமா ஆனாலும் சுகம் வாழ்த்துகள்.

போளூர் தயாநிதி said...

பொதுவாக மனிதனின் உளநிலை அவனின் எழுத்தில் பிரதிபலிக்கும் மனித வாழ்வியல் எதையோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கும்
பெரிதினும் பெரிது கேள் என்பார்கள் அப்படி பெரிதாக கிடைத்தாலும் நிறைவடைந்து விடுவதில்லை உளம் ஒன்றை தீர்மானித்துவிட்டால் அதிலிருந்து விடுபடுவதுமில்லை காதல் என்பது முழுமையாக கண்டு பேசி முழுமையாக அறிந்து தெளிந்து நிண்டால் தோல்வி இல்லை நம் பழந்தமிழ இலக்கியங்களும் அதைத்தான் கதைக்கிறது விடிவு விரைந்துவரும் காத்திருத்தல் தன் இனிமையானது .உம்மவர் இந்நேரம் காணமல இருப்பார் ?

சி.பி.செந்தில்குமார் said...

கவிதையும் லே அவுட்டும் அழகு. அதுவும் கறுப்பு பேக் க்ரவுண்டில் பச்சை எழுத்துக்கள் மனதை கொள்ளை கொள்கிறது ஹேமா

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில்தான் எனக்கு புரியவில்லை ஹேமா..

சி.பி.செந்தில்குமார் said...

>>>>>நீ எனக்கொன்றும் சமையல் செய்யக்கூட வேண்டாம்.நீயே சமையலாயிரு என்று சிரித்த ஞாபகம்.

காதலை பொங்கி பிரவாகப்படுத்திய வரிகள்

சி.பி.செந்தில்குமார் said...

>>>எவரும் விரும்பாத பூக்களையே நடுவேன்
பறிக்கும் ஆசை வராத பூக்கள்
எனக்குமானது மட்டுமாய்.

அடேங்கப்பா... கற்பனை கொடி கட்டிப்பறக்குதே,,,

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா.. சமீபத்தில் நீங்கள் எழுதிய பதிவுகளில் பெஸ்ட் என இதை சொல்லலாம்.

Bibiliobibuli said...

அடேங்கப்பா இப்படியும் கடிதம் எழுதலாமா!! இதில் இருப்பது சுகமான சோகமா அல்லது வேதனையா புரியவில்லை, ஹேமா.

ஹேமா said...

காதலர் தின வாழ்த்துச் சொன்ன எல்லோருக்குமே மகிழ்ச்சியான நன்றி நண்பர்களே.....

நிறைய நாளா நினைச்சிருந்த ஒரு விஷயம்.உரைக்கவிதையோட கவிதை போடணும்ன்னு.இனி இதுமாதிரி அடிக்கடி வராது.நிரூபனுக்கு பிடிச்சிருக்குப்போல.இது ஒரு உணர்வு அவ்வளவுதான்.வாழ்வில் பலரும் சந்திச்சிருக்கும் சந்தோஷம் காதல் ஏக்கம்ன்னு எல்லாமே கலந்த உணர்வு.

ம்ம்ம்...சத்ரியன் சரியாக் கேட்டிருக்கார்.வாழ்வில் நான் என்கிற நாம் எத்தனையோ அவதாரங்கள் எடுக்கிறோம்.இந்த அவதாரத்தில் ஒரு அத்தியாயத்தில் என் பாத்திராமாக.
அதுதான் "ஒரு நான்" என்று சேர்த்திருந்தேன்.என்னை இந்தச் சாட்டில சுயநலக்காரின்னும் திட்டியாச்சு.இப்ப மனசுக்கு
ஆறுதலா இருக்குமே !

சிபி புரியவில்லை என்றும் சொல்லியிருந்தார்.ஏன் சிபி...ஒரு நான் ஒரு அறிவிப்பாளன்.
இருவருக்குமான மனதின் எண்ணங்கள்,உணர்வுகள்.
அவ்வளவும்தான்.ஆழமாக எதுவுமில்லை !

ஆதவா..."பனிமுடிய" என்றுதான்.
"பனிமூடிய" என்றில்லை.பனிக்காலம் முடிய புற்கள் முளைக்கத்தொடங்கும்.
அதைத்தான் சொல்ல வந்திருக்கிறேன் !

இனி...நசர் கும்மி.....முடில.எல்லாரும் கேட்டுக்கோங்க.அமெரிக்கால இருக்கிற வெள்ளைக்காரங்க எல்லாரும் இதைக் கவனிக்காம இருக்காங்களே.அவரோட வேலை இடத்தில இந்தக் கும்மிக்கெல்லாம் சேர்த்துத்தான் சம்பளம் குடுக்கிறாங்க.
ஆனா ஒண்ணு தெரிது.அத்தனை வரிகளையும் ரசிச்சிருக்கார்ன்னு.
கொஞ்சம் கொஞ்சம் வேலையும் செய்து குடுப்பார்ன்னும் நம்புவோம் !

ஜோதிஜி...நசர் மாதிரி இருக்கணும்ன்னு நானும் ரொம்ப ரொம்ப முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கேன்.கொஞ்சம் டைம் குடுங்க !

கலா...என்ன ஒரே கவலை.நான் நல்லாத்தானே இருக்கேன்.சும்மா எழுதினா என்னை அழ வச்சிடுவீங்க போல இருக்கே.எனக்காக மின்னஞ்சலில் வந்த அழகான ஆழமான கவிதைக்கும் இந்தச் சமயத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன் தோழி !

போளூர்தயா....!

மற்றும் என் அன்புநண்பர்கள் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் அத்தனை உறவுகளுக்கும்
மிக்க மிக்க நன்றி !

மாதேவி said...

நெகிழ்ச்சியான கவிதை ஹேமா. மனதைத் தொட்டு நிற்கிறது.

Raja said...

மிக ரசித்தேன் ஹேமா... வாழ்த்துக்கள்

சாய்ராம் கோபாலன் said...

அபாரம். காதலை பொங்கி பிரவாகப்படுத்திய வரிகள்

அப்பாதுரை said...

மழையா. வெள்ளமா. ஓடையா. நதியா. தூறலா. கடலா. சாறலா. உமது காதல்?

'திருந்தவில்லை' பகுதி மிகவும் ரசித்தேன். காதலர்கள் திருந்துவதேயில்லை. சரியே.

எல்லா வண்ணங்களுக்கும் உள்ளே வெள்ளை தானே? தேர்வும் பொருத்தம் தான்.

நிலாமகள் said...

அன்பின் ஹேமா...
பதிவின் கணம் என்னில் பாரமேற்றியது. உல்லாசமும் சந்தோஷமும் மட்டுமல்ல... ஊடலும் ஏக்கங்களும் கூட காதலை உன்னதப் படுத்தி விடுகின்றன. அன்பின்பாற் பட்ட காயங்களும் உளைச்சல்களும் மாற அதே அன்புதான் மருந்தாகிறது. அன்பு ஒருபோதும் மறைவதில்லை... அது அவ்வப்போது இடம் மாறுகிறது... அடர்ந்த சோக இழையூடே குறுக்கிழையாய் கிடந்த பேரன்பின் பெருந்தன்மை இவ்வசன கவிதையை ஒப்பற்றதாக்கியதெனலாம்.

karthik said...

touch the heart!!

நெற்கொழுதாசன் said...

வாசிக்கையில் மனதை தொட்டு செல்கிறது ஒரு அழகிய பனிச்சாரல்.வாழ்த்துக்கள் அக்கா

parasakthi said...

Arumai

விச்சு said...

முழுதாக மூன்று தடவையாவது வாசித்திருப்பேன். உங்களவர் மீது நீங்கள் வைத்திருந்த அன்பை புரிந்துகொண்டேன்.. இதற்குமேல் எனக்கு ஒன்றும் சொல்ல இயலவில்லை...

Post a Comment