*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, November 17, 2008

போர் முகம்...

தூக்கம் தொலந்த
இரவுக் கோடிகளில்
எங்கள் பிரயாணங்கள்.
பசியும் தூக்கமும் பாரமாகி
தூக்கி எறியப்பட்ட பிசாசுகளாய்.
இலட்சியங்களுக்கு நடுவில்
சாத்தான்களாய் அவைகள்.

சிலசமயம்...
இதோ அருகிலேயே என்பதாயும்
சிலசமயம்...
கொஞ்சம் பொறு என்பதாயும்
நம்பிக்கை
நடைகள் தளராமல்.

கல்லறைச் சிநேகிதரோடு
பேசியபடியே
சின்ன உறக்கம்.
வெற்றிப் பூக்கள்
கொண்டுவரத் தட்டி எழுப்பிவிட்டு
மீண்டும் உறங்குவான் அவன்.

சின்னதாய் பெரிதாய்
எமக்குத் தேவையான
காலவரயறை அற்ற
காவியங்களை
இழந்து நிற்கிறோம்.
பள்ளிப் பாடம் சொல்லித்
தராத...தரமுடியாத
சரித்திரங்களாய் நாங்களே
சரித்திர ஜாம்பவான்களாய்.

பாலடையில் மருந்து பருக்க
அருவருத்த நாங்கள்
விருப்பத்தோடு விரல் நுனியில்
குப்பி மருந்தோடு.
நீலகண்டன் விழுங்கிய நஞ்சு
கழுத்தோடு மட்டும்தான்.
நாங்களோ நஞ்சு மாலையை
நெஞ்சோடு சுந்தபடி.
சில பொழுதுகள்
நாங்களே நஞ்சாகி.

யார் கொடுத்த சாபமோ
அகதிகளாய் அநாதைகளாய்
எம் மக்கள்.
மானத்தின்
மானத்தைக் கூட இழந்தவர்களாய்.
நாடு கடந்தாலும் உள்ளம் மட்டும்
தன் மண்ணோடு.
விண்ணோடு கலந்தாலும்
வீரியத் தமிழனாய் என்றும்!!!

(ஹேமா சுவிஸ்)

14 comments:

தமிழன் said...

நாடு கடந்தாலும் உள்ளம் மட்டும்
தன் மண்ணோடு.
விண்ணோடு கலந்தாலும்
வீரியத் தமிழனாய் என்றும்!!!///////////////////////////////

மறுக்க முடியாத உண்மை, மனதை தொட்ட வரி.

அப்புச்சி said...

சிலசமயம்...
இதோ அருகிலேயே என்பதாயும்
சிலசமயம்...
கொஞ்சம் பொறு என்பதாயும்
நம்பிக்கை
நடைகள் தளராமல்

தங்களின் பல கவிதைகள் தரமானவையாக இருந்தாலும், அதிகமாக நான் பின்னூட்டம் தருவதில்லை.என்ன சோம்பேறிதனம் தான் காரணம்.இந்த கவிதையை பார்த்ததும் கட்டாயம் பின்னூட்டம் போட வேண்டும் என தோண்றியதால் வேலை இடைவேளையில் வெளியே வந்து பின்னூட்டம் இடுகிறேன். உப்பு மட சந்தி பார்த்தேன் ,நன்றாக உள்ளது,கட்டாயம் பதில் போடுகிறேன்.உப்புமட சந்தியில் மேலே உள்ளவர்கள் உங்கள் உறவினர்களா?

ஹி ஹி ஹி

அப்புச்சி

தமிழ் said...

/யார் கொடுத்த சாபமோ
அகதிகளாய் அநாதைகளாய்
எம் மக்கள்.
மானத்தின்
மானத்தைக் கூட இழந்தவர்களாய்.
நாடு கடந்தாலும் உள்ளம் மட்டும்
தன் மண்ணோடு.
விண்ணோடு கலந்தாலும்
வீரியத் தமிழனாய் என்றும்!!!/

சாபங்கள்
சாகட்டும்
விடியல்
விரைவில்
விடியட்டும்

http://urupudaathathu.blogspot.com/ said...

///மானத்தின்
மானத்தைக் கூட இழந்தவர்களாய். ///

அருமையான வரிகள்..
ஹேமா..

மனதை பாதித்தது ..

சோகங்கள் ...

ஹேமா said...

திலீபன்,நன்றி கருத்துக்கு.மனம் குழம்பிப்போய் இருக்கிறேன்.எங்கே புதிதாய் பதிவுகள் ஒன்றையும் காணோமே.காத்திருக்கிறேன்.

ஹேமா said...

சோம்பேறி அப்புச்சிக்கு,அதிசயமாய் வந்ததற்கு மிகவும் நன்றி.கவிதைகள் எழுதுவதற்கு பின்னூட்டம் தந்தீர்கள் ஆனால் அடுத்த கவிதை எழுத உற்சாகமாகவும் சரி பிழைகளைத் திருத்தவும் உதவும்.

அது சரி...உப்புமடச் சந்தி பக்கம் போனீங்களா?ஓ...அங்க இருக்கிறவையள் எங்கட சொந்தக்காரர்தான்.அவையள் சொல்லிச்சினமே நீங்களும் தங்கட சொந்தமாம் எண்டு!

ஹேமா said...

//சாபங்கள்
சாகட்டும்
விடியல்
விரைவில்
விடியட்டும்//

திகழ் காத்திருபோம்.

ஹேமா said...

உருப்படாத(வன்)து சோகங்களையே சொந்தங்களாய் கூடவே வைத்திருக்கிறோமே!என்ன செய்ய்லாம்!

Unknown said...

உணர்ச்சி மிக்க வரிகள் பாராட்டுக்கள் ஹேமா.
//கல்லறைச் சிநேகிதரோடு
பேசியபடியே
சின்ன உறக்கம்//

மீண்டும் என்னை வாசிக்க வைத்த வீரியமான வரிகள் இவை.

பாடலின் தம்பியையும், தங்கையையும் அனுப்பி வை தாயே என போராளி கேட்பது போன்று சில வரியில் தென்படுகின்றதே!

கற்பனை கவிஞனுக்கு உரித்தானது தான், ஆனால் சொந்தத்தை இழந்த உறவுகளுக்குத் தான் அதன் கனம் தெரியும், ஈழப் போராட்டத்துக்கு இன்னும் உயிர்களைத் தாரை வார்க்க எந்த உறவும் தயாரில்லை என்பது வன்னிக் களம் கண்ட அனைவருக்கும் நன்கு தெரியும்.

"வன்னியில்
வாய்ப் பூட்டு இல்லாத
மானிடனிடம்
கேளுங்கள்
நாடல்ல
நிம்மதியே வேண்டுமென்று
உரத்துச் சொல்வான்!"

thamizhparavai said...

கவிதை முன்பே படித்துவிட்டேன் ஹேமா.பின்னூட்டம் என்ற பெயரில் எதையோ கிறுக்க மனது வரவில்லை.
சாபங்கள்
சாகட்டும்
விடியல்
விரைவில்
விடியட்டும்

Anonymous said...

அன்பு ஹேமா...உங்கள் கவிகளை நான் வந்து வாசிக்காமல் இருப்பதில்லை...ஆனால் படித்த பிறகு என்ன சொல்வது என தெரியாமல் கண்ணில் கண்ணீரோடு சென்றுவிடுவேன்...

Anonymous said...

யார் கொடுத்த சாபமோ
அகதிகளாய் அநாதைகளாய்
எம் மக்கள்.
மானத்தின்
மானத்தைக் கூட இழந்தவர்களாய்.
நாடு கடந்தாலும் உள்ளம் மட்டும்
தன் மண்ணோடு.
விண்ணோடு கலந்தாலும்
வீரியத் தமிழனாய் என்றும்!!!

ஹேமா said...

கமல்,மனதில் ஏக்கத்தோடு கையாலாகதவளாய் காத்திருக்கும் பாவி நான்.மன ஏக்கங்களை வரிகளில் கொட்டவே முடிகிறது.

Vishnu... said...

யார் கொடுத்த சாபமோ
அகதிகளாய் அநாதைகளாய்
எம் மக்கள்.
மானத்தின்
மானத்தைக் கூட இழந்தவர்களாய்.
நாடு கடந்தாலும் உள்ளம் மட்டும்
தன் மண்ணோடு.
விண்ணோடு கலந்தாலும்
வீரியத் தமிழனாய் என்றும்!!!

மனதை தொட்டது கவிதை ...ஹேமா ....

உண்மையான வரிகள் ...

Post a Comment