Saturday, July 12, 2014

ஈழம் இப்போ காஸா...

நிலா...நீ
கனடாவில்
காவலரண்களற்ற பூமியில்
எண்ணங்களை
விரித்துப் பறக்கவிடுகிறாய்
ஓவியமாய்.

எனக்கும் ஆசை
வானம் கீறி
பஞ்சுத் தேரைப் பறக்கவிட.

ஆனால்...
இங்கும் (ஈழம்)
இஸ்ரேலிலும்
கடத்திப்போகிறது
காவல்களே
பறவைகளையும்

வானத்தையும்.

பதுங்குகுழிப் பாம்புகூட
பாவம் இவர்களென
ஒதுங்கி ஊர
இஸ்ரேலரின் துவக்குகள்
இரக்கமேயில்லாமல்.

இலை தறித்து
கிளை தறித்து
அடிமரம் தறிப்பதைவிட
வேர்களைத் தறிப்பதுதான்
முழு அழிப்பின் தந்திரம்.

அம்மாவின் மார்பை
கடத்திவிட்டார்கள் நிலா.

பாலிரங்கும்
உறிஞ்சிய மார்பில்
இலையான் மொய்க்க
அம்மா அழுதுகொண்டிருப்பாள்
எங்கோ ஏதோவாய்
பசியோடு பதுங்கியிருக்கும்
என்னையெண்ணி.

சுடலை மாடர்கள்
குழந்தைகளைக்
கொன்று காவுகையில்
பாரம் சுமக்காதோ மனம்
ஒருகணம்.

என்னையும் கீறிக்
காற்றில் பறக்கவிடேன்
நிலா ஒருமுறை.

தூரம் தின்னும்
நம்பிக்கைகளைச் சுமப்பேன்
உதறிச் சிதறுமுன்!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. வலிகள் இங்கே வரிகளாய்..அருமை..

    ReplyDelete
  2. //இலை தறித்து
    கிளை தறித்து
    அடிமரம் தறிப்பதைவிட
    வேர்களைத் தறிப்பதுதான்
    முழு அழிப்பின் தந்திரம்//

    வலி நிறைந்த கவிதை... அருமை அக்கா...

    ReplyDelete
  3. வணக்கம்
    கவிதையின் வரிகளில் வலி தெரிகிறது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஈழத்தையும் கனடா நிலாவையும் சேர்த்தே சொல்லிய உவமை அருமை கவிதாயினி!

    ReplyDelete