Wednesday, September 03, 2008

சலிப்பு...

காலம் கலைத்த வேகத்தில்
வாழ்வின் விளிம்புப் படிகளில்
விழுந்துவிடாமல் நான்.
முயலின் வேகத்தில் ஓடி
வியர்க்க வைக்காமல்,
ஆமை வேகத்தில் ஊர்ந்து
ஏமாற்றியதால்
பற்றிப் படர ஏதுமற்று
எவருமற்று
பற்றுதலே இல்லா வாழ்வாகி
கற்றது பாடம் நிறைவாகி
மற்றவர் கற்கப் பாடமாகி
தோற்றம் வெளியில் அழகாய்
உள்ளுக்குள் இற்ற மரமாகி
இன்னும் சரியாமல்.


இப்போதெல்லாம்
எதையும் கண்டு கொள்ள
விரும்புவதில்லை.
கவலைப்படுவதும் இல்லை.
வான் தகர்ந்தால் என்ன
பூமி நகர்ந்தால் என்ன.
அமிலம் கக்கும்
மனிதர்கள் நடுவில் வாழ்வதைவிட
மனிதனை
முழுதுமாய் புரிந்துகொண்ட
மிருகங்கள் இடையில்
வாழப் பழகிக் கொண்டவளாய்.


என்றோ பகலில்
தொலைந்த ஒன்றிற்காய்
இரவில் மட்டுமே
வருந்திப் பயன் ஒன்றுமேயில்லை.
விதியின் கையில் சாட்டைக் கயிறு
என்றான பின்
நடைபாதை மிக மௌனமாக.
நெஞ்சக் குழியை
விதி நெருக்கி இறுக்கும் மட்டும்
வாழலாம்
என்ற இயல்போடு!!!


ஹேமா(சுவிஸ்)

19 comments:

  1. மனதின் பாரம் கவி வரிகளில் தெரிகின்றது.

    பாராட்டுக்கள் ஹேமா!

    ReplyDelete
  2. இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீள முடியவில்லையா? கவிதை வரிகள் அபாரம்.

    ReplyDelete
  3. இப்போதெல்லாம்
    எதையும் கண்டு கொள்ள
    விரும்புவதில்லை.
    கவலைப்படுவதும் இல்லை.
    வான் தகர்ந்தால் என்ன
    பூமி நகர்ந்தால் என்ன.
    அமிலம் கக்கும்
    மனிதர்கள் நடுவில் வாழ்வதைவிட
    மனிதனை
    முழுதுமாய் புரிந்துகொண்ட
    மிருகங்கள் இடையில்
    வாழப் பழகிக் கொண்டவளாய்.
    //
    அமிலம் கலந்த மனிதர்களுக்குள்ளும் நல்ல மனிதர்கள் இருப்பார்கள் ஹேமா. ஆனால் என்ன செய்வது 3 பேர் நல்லவர்களாக இருந்தால் 100 பேர் மிருங்களாக தான் இருக்கிறhர்கள், உங்கள் கருத்து நியாயமானது தான்,

    ReplyDelete
  4. கவிதை படிக்கையில் சலிப்பேற்படவில்லை. வரிகள் சரளமாக விழுந்துள்ளது. கவிதை கவலையைச் சொல்லுவதை விட , தத்துவ வரிகளாகத் தோன்றுகின்றது.
    தலைப்பும், கவிதையும் வெகுப் பொருத்தம் ஹேமா...

    ReplyDelete
  5. மனதை இலேசாக்க என்னென்னவோ முயற்சி செய்தாலும் எங்கே?அதுதான் வரிகளிலும் கனம்.நன்றி களத்துமேடு.

    ReplyDelete
  6. உண்மைதான் திலீபன் அதே தாக்கம்தான்.வரும் ஒரு கவிதையாக.என் வாழ்நாளில் இப்படி ஒரு அசிங்கம் பார்க்கவேயில்லை.
    நினக்கவே அருவருப்பாய் இருக்கு.

    ReplyDelete
  7. கடையம் ஆனந்த் திரும்பவும் வந்து நீங்கள் பின்னூட்டம் இடுவது சந்தோஷமாயிருக்கு.வருடங்கள் பழகினாலும் மனிதர்களை அடையாளம் காணக் கஸ்டமாயிருக்கே.100 பேருக்குள் 3 பேர் நல்லவர்கள் என்றால் நல்லவர்களையும் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களையும் 97 பேரோடுதானே சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை அண்ணா,"சலிப்பு" கவிதை சலிப்பேற்படுத்தவில்லை என்கிறீர்கள்.சலிக்காமல் வாசித்திருக்கிறீர்கள் அதுதான்.நன்றி.

    ReplyDelete
  9. //அமிலம் கக்கும்
    மனிதர்கள் நடுவில் வாழ்வதைவிட
    மனிதனை
    முழுதுமாய் புரிந்துகொண்ட
    மிருகங்கள் இடையில்
    வாழப் பழகிக் கொண்டவளாய்//

    ஹேமா... கவிதை உலகில் நீங்கள் பல படிகளைத் தாண்டி பயணிக்கிறீர்கள். வரிகள் விளைவிக்கும் வலிகள் கொஞ்ச நஞ்சமல்ல.. விரைவில் உங்கள் தொகுப்பை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. ஹேமா இதை விட அசிங்கமாக எழுதி என்னை அவமானப்படுத்தி உள்ளார்கள், ஏன் நான் அரசியலில் இருந்த போது இதை விட அசிங்கமாக பேசியுள்ளனர். இந்த தரம்கெட்டவர்கள் பேசுவதால் நாம் அப்படி ஆகிவிடப்போவதில்லை. ஒருவேளை தங்கள் குடும்ப பழக்கத்தின் அனுபவத்தில் கூறுகின்றனர் என்று எடுத்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. நல்ல கவிதை ஹேமா...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சேவியர் அண்ணா மனம் மிக மிகச் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது.
    உங்களிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதாமன வார்த்தைகள்.
    எனக்குள் ஒரு சின்னத் திருப்தியைத் தருகிறது.நன்றி அண்ணா.நீங்கள் சொன்னதை கவனத்தில் எடுக்கிறேன்.

    ReplyDelete
  13. திலீபன்,முகம் காணாவிட்டாலும் தூர இருந்து ஆறுதல் தரும் ஒரு சகோதரனாய் ஆறுதல் சொல்கிறீர்கள்.நன்றி என்றும்.

    ReplyDelete
  14. வாங்க செல்வேந்திரன்.ரஜனி ஸ்டைல்ல இந்தக் கவிதைக்குச் சுருக்கமாக இவ்வளவுதான் கருத்துச் சொல்ல முடியுமாக்கும்!நன்றி.திரும்பவும்வாங்க.

    ReplyDelete
  15. உங்கள் வலிகள் கவிதை வரிகளில் தெறிக்கிறது, படிப்பவர் மனம் கனமாகும் வண்ணம். மனதை சலிப்படைய வைக்காதீர்கள். ஒவ்வொரு மனிதனும்..ஒரு தனி மனிதனே.உங்களோடு வாழ பழகிகொள்ளுங்கள். மீண்டும் ஒரு நல்ல கவிதை.

    ReplyDelete
  16. We must always try to stand in our own legs in life. anyway nice lines.

    ReplyDelete
  17. Hema. Is there available any monthly magazines in your country? If possible. kindly send the details by mail. Email-id:swaminathant2012@gmail.com-Thanks.

    ReplyDelete
  18. Hema. Is there available any monthly TAMIL magazines in your country? If possible. kindly send the details by mail. Email-id:swaminathant2012@gmail.com-Thanks.

    ReplyDelete