Monday, December 01, 2008

கரம் கொடுத்தீர்....நன்றி.

தமிழின் தாயகமே...
தாய் தமிழின் தேசமே...


நீ...
எங்கள் ஈழத்தாய்
முகவரி தேடி வந்துவிட்டாய்.
"பாரதமே கொஞ்சம் கைகொடு"என
நீட்டிய கைகளுக்குள்
நம்பிக்கையின்
கரங்களையே தந்துவிட்டாய்.
சோர்வின் கற்களைத் தகர்தெறிய
படையோடு திரண்டுவிட்டாய்.
அண்ணணாய் தம்பியாய்
இணைந்துவிட்டாய்
இனி எதற்கும் அஞ்சோம்.

ஓ...
யுகம் யுகமாய் காத்திருந்த
உங்கள் கரங்களின் பெருமிதத்தோடு
ஈழத்தாய் இப்போதே
சுதந்திரமாய் மூச்சு விடுவதாய்
ஒரு உணர்வு.

ஆருடம் பார்த்துப் பார்த்துக்
களைத்த வேளை,
காத்திருப்பின் காலம்
களைத்த வேளை,
"வந்தோம் இனி இருப்போம்
என்றும் உம்மோடு"என்று
களைத்துவிட்ட உடலுக்குள்
உந்துசக்தியாய்
மனதோடு உரசியபடி நீங்கள்.

கடந்த காலத்தின் சோகங்கள்
சொடுக்கும் கணத்தில்
விட்டுப்போனதாய்.
அவலங்களே சுகங்களாய் மாறி
குயிலின் கீதமாய்.

பதுங்கு குழிகள்
தேவையில்லை இனி எமக்கு.
பூக்களோடு புன்னகை வளர்ப்போம்
இனி அதற்குள்.

வானமெங்கும்...
சந்திரனும் சூரியனும் நட்சத்திரங்களும்
குந்தியிருந்து கூடிக்குலவும் சத்தங்களும்,
சந்திக்க வரும் பறவைகளும் தவிர
வேறு பறப்புக்கள் கிடையாது இனி அங்கு.

ஓ...
வார்தைகள் கூட வலி மறந்து
இறக்கைகள் முளைத்தனவாய்.
எத்தனை தசாப்தங்கள்
எத்தனை எத்தனை இழப்புக்கள்
எம் தேசத்தில்.
அத்தனையும்
எம் தசை நார்களோடு
பின்னிப் பிணைந்தவையாய்
மறக்கவே முடியாத
உறவுகளின் பதிவுகளாய்.

இனி அஞ்சோம்...இனி அஞ்சோம்.
உங்கள் கூட்டுக் குரல்களின்
அதிர்வு இடிக்கு
அசையவே வேண்டும்
எந்த ஒரு வானகமும்.
ஆயுதம் தூக்காத
அதிர்வின் ஆர்ப்பாட்டம் உங்களது.

அப்பாவுக்கும்...அம்மாவுக்கும்
அண்ணணுக்கும்...அக்காவுக்கும்
நன்றி சொல்லத் தயாராயில்லை நாம்.
சோழனும் ஈழவனும்
இணைந்துவிட்டான்.
இனி...!!!!

ஹேமா(சுவிஸ்)

19 comments:

  1. பதுங்கு குழிகள்
    தேவையில்லை இனி எமக்கு.
    பூக்களோடு புன்னகை வளர்ப்போம்
    இனி அதற்குள்!

    ம்.....நன்றாகவிருக்கிறது. மானாட மயிலாட ரசித்திருந்த தமிழகம் இப்போது தான் எமக்காக மனம் திறந்திருக்கிறது எனும் போது மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. உணர்வுமிக்க கவிதை ஹேமா வழக்கம் போல்

    ReplyDelete
  3. *\\அத்தனையும்
    எம் தசை நார்களோடு
    பின்னிப் பிணைந்தவையாய்
    மறக்கவே முடியாத
    உறவுகளின் பதிவுகளாய்.\\*


    கவியின் வரிகள்
    மனதின் வலிகளை
    பிரதிபலித்து நிற்கின்றது.

    ReplyDelete
  4. கமல்,தமிழக மக்கள் காலம் கடந்தாவது எங்களை உணர்கிறார்களே என்பதில் சந்தோஷம்தானே!

    ReplyDelete
  5. நன்றி பிரபா.என்றாவது ஒருதரம் வந்து முத்துச் சொல்லாய் ஒரு சொல் உதிர்த்துவிட்டுப் போகிறீர்கள்.நன்றி பிரபா.

    ReplyDelete
  6. காரூரன்,எத்தனையோ இழப்புக்கள்.அவைகளே வலியான வரிகள்.நன்றி காரூரன்.

    ReplyDelete
  7. ஹேமா வர வர கவிதையில் பின்னி எடுக்கிறீர்கள். எங்கே உங்கள் நாட்டின் இயற்கை அழகை வர்ணித்து ஒரு கவிதை செதுக்குங்களேன்.

    ReplyDelete
  8. வார்த்தைகள் தேவையில்லை.. வருகை மட்டுமே போதும் என நினைக்கிறேன்...
    கவிதையெனில் கருத்துக் கூறலாம். உணர்வெனில் உடன் உருகத்தான் முடியும்.....

    ReplyDelete
  9. Wishing ur happiness to last forever.

    ReplyDelete
  10. Anbu Hema...Tamizhaga makkaluku endrume Eezha makkal meedhu ANBU Kurainthathillai...Niththam engal sagodhara sagodharigal padum vedhanaiyai ninaithu manam vedhumbaatha naatkal mika sila..Aayinum engal kuralai olika vidaamal seidha sila arasiyal kullanarigalal engal anbu illamal poi vidavillai nanbii.

    ReplyDelete
  11. வாங்கோ ஆனந்த்.பராட்டுக்கு நன்றி.உண்மையான பாராட்டுத்தானே!

    எங்கள் நாடு அழகுதான்.எப்படித்தான் அழகை வர்ணித்து எழுதத் தொடங்கினாலும் இன்று அது கலைந்து கிடப்பதுதானே முன்னுரையாக எழுத வருகிறது.எப்படி?

    ReplyDelete
  12. தமிழ்பறவை அண்ணா அடிக்கடி பறந்து போயிடறீங்க.தேடித்தான் பிடிக்க வேண்டியிருக்கு.என்றும் உடன் இருங்கோ.அதுதான் எங்களுக்கு பலம்.

    ReplyDelete
  13. நன்றி முனியப்பன்.என்றும் இணைந்திருங்கள்.

    ReplyDelete
  14. நன்றி மது உங்கள் அன்பிற்கு.இன்று உங்கள் குரல்கள் தடைகளை மீறி ஒலிக்கத் தொடங்கிவிட்டதே.

    ReplyDelete
  15. காத்திருப்புக்கான கவிதை அருமை!

    ReplyDelete
  16. ஈழவன் வாங்கோ.என்ன ஆச்சு?இவ்வளவு தாமதமாக வந்து அதுவும் சுருக்கமாய் ஒரு கருத்து!
    என்னவோ பிடிக்கேல்ல எண்டு மட்டும் தெரியுது.என்ன?

    ReplyDelete
  17. காணொளித் தொகுப்புத் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகிறோம் வாசக நெஞ்சங்களே! நாங்கள் முதலில் இணைத்திருந்த காணொளித் தொழில் கருவி சில கணினிகளில் தொழிற்படவில்லை என்கின்ற எம் வாசகர்களின் வேண்டுகோளிற்கின அனைத்து வாசகப் பெரு மக்களும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் இதனை மீள் பதிவிடுகின்றோம் என்பதை இவ் விடத்தில் அறியத் தருகின்றோம். இதற்காக மிகவும் கடுமையாக உழைத்த எமது காணொளித் தொழில் நுட்பப் பிரிவிற்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் எமது வாசகர்கள் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  18. //பதுங்கு குழிகள்
    தேவையில்லை இனி எமக்கு.
    பூக்களோடு புன்னகை வளர்ப்போம்
    இனி அதற்குள்.
    //

    வேதனைகள் தீரத்தான் போகிறது
    என்றேனும் ஒரு நாள்
    அது ஏன்
    இன்றாய் இருக்கக் கூடாது!

    ReplyDelete
  19. வணக்கம் பூர்ணிமாசரண்.வாங்க வரவேற்கிறேன் முதன் முறையாக.அச்சோ...இன்றே எம் வேதனைகள் தீருகிறதா!ஓ...நினைக்கவே எவ்வளவு சந்தோஷம்.உங்கள் வாக்குப் பலிக்கட்டும்.உங்கள் வாய் பொன் வாயாக இருக்கட்டும்.
    காத்திருக்கிறோம்.நன்றி பூர்ணிமா.

    ReplyDelete